பயங்கரவாத அச்சுறுத்தல்.. இந்தியாவிடம் உதவி கேட்டு வருகிறார் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே
டெல்லி: பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியாவிடம் உதவி கேட்க டெல்லிக்கு விரைவில் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே வருகை தர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் தமிழர்கள் மீதான அடக்குமுறை மீண்டும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மேயர் மணிவண்ணன் அண்மையில் பயங்கரவாத தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணத்தில் அசுத்தம் செய்பவர்களிடம் அபராதம் வசூலிக்க தனி காவல்படை ஒன்றை மணிவண்ணன் உருவாக்கி இருந்தார். ஆனால் இந்த காவல்படையின் சீருடையானது தமிழீழ விடுதலைப் புலிகளின் போலீசார் சீருடையை போல் இருந்தது என்பது சிங்கள அமைப்புகளின் குற்றச்சாட்டு.
இதனடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சித்தார் என கூறி மணிவண்ணன் கைது செய்யப்பட்டார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து மணிவண்ணன் விடுதலை செய்யப்பட்டார்.
மேலும் கேரளா கடற்பரப்பில் ஆயுதங்கள், போதைப் பொருட்களுடன் 6 சிங்களர் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் பயங்கரவாத இயக்கங்கள் வேரூன்ற முயற்சிப்பதையே இந்த சம்பவம் வெளிப்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே இந்தியாவுக்கு வருகை தர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையில் பயங்கரவாத இயக்கங்கள் காலூன்ற முயற்சிப்பதைத் தடுக்கும் வகையில் இந்தியாவின் உதவியை கோத்தபாய ராஜபக்சே கேட்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது. டெல்லி பயணத்தின் போது பிரதமர் மோடியிடம் இது தொடர்பாக கோத்தபாய ராஜபக்சே பேசுவார் என்கின்றன இலங்கை வட்டாரங்கள்.