அதிநவீன ஆயுதங்களுடன் தயார் நிலையில் ரஷ்ய ராணுவம்! உக்ரைன் எல்லையில் பதற்றம்- பரபர சாட்டிலைட் படங்கள்
டெல்லி: உக்ரைன் எல்லையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், இது தொடர்பான சாட்டிலைட் படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
முன்பு சோவியத் ஒன்றியத்தில் ஒரே நாடாக இருந்த ரஷ்யா, உக்ரைன் இடையே கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.
இது இரு நாடுகளுக்கு இடையே மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் கூட பெரும் பதற்றமான ஒரு சூழலை உருவாக்கியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை கூட கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

ரஷ்யா-உக்ரைன் உறவு
ரஷ்யாவும் உக்ரைனும் புவியியல் ரீதியாகவும் சரி, கலாசார ரீதியாகவும் சரி ஆழமான உறவுகளைக் கொண்டுள்ளது. உக்ரைன் நாட்டில் கூட பரவலாக ரஷ்ய மொழி தான் பேசப்படுகிறது. 1991ஆம் ஆண்டு வரை சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்த ரஷ்யாவும் உக்ரைனும் இணக்கமான உறவைக் கொண்டுள்ளது. எனவே, உக்ரைன் இயல்பாகவே ரஷ்யாவுக்கு ஆதவரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது ரஷ்ய அதிபர் புதினின் விருப்பமாக உள்ளது. இருப்பினும், உக்ரைன் நாட்டில் கடந்த சில தேர்தல்களில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆதரவான தலைவர்களுக்கே மக்கள் வாக்களித்துள்ளனர்.

இது தான் காரணம்
இதையெல்லாம் தாண்டி கடந்த சில ஆண்டுகளாகவே ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ அமைப்பில் இணைவதிலும் உக்ரைன் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக, நேட்டோ அமைப்பில் விரைவில் உக்ரைன் இணையலாம் என்பது போன்ற தகவல்களும் கூட வெளியானது. உக்ரைன் மேற்குலக நாடுகளுடன் இணக்கமாக இருப்பதை ரஷ்யா, குறிப்பாக அந்நாட்டின் அதிபர் புதின் விரும்பவில்லை. ரஷ்யாவுடன் எல்லையைப் பகிரும் உக்ரைன் நேட்டோவில் இணைந்தால், ரஷ்யாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் புதின் கருதுகிறார்.

சாட்டிலைட் படங்கள்
பெலாரஸ், கிரிமியா மற்றும் மேற்கு ரஷ்யா பகுதிகளில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டுள்ளதைப் புதிதாக வெளியாகியுள்ள செயற்கைக்கோள் படங்கள் தெளிவாகக் காட்டுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் படையெடுக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், இந்த படங்கள் வெளியாகியுள்ளது. Maxar வெளியிட்டுள்ள இந்த சாட்டிலைட் படங்களில் எல்லைப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. குறிப்பாக கிரிமியாவில், கடந்த பிப். 10இல் எடுக்கப்பட்ட படத்தில் சிம்ஃபெரோபோலுக்கு வடக்கே அமைந்துள்ள Oktyabrskoye விமானநிலையத்தில் அதிகளவு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. இந்த விமானநிலையத்திற்கு 500க்கும் மேற்பட்ட ராணுவ கூடாரங்கள் காணப்படுகிறது.

எல்லையில் ராணுவம்
மேலும், புதிய துருப்புக்களும் உபகரணங்களும் கூட சமீபத்தில் டோனுஸ்லாவ் ஏரியின் கரையில் அருகே குவிக்கப்பட்டுள்ளது. எல்லையில் அமைந்துள்ள Novoozernoye என்ற இடத்தில் தீவிர ராணுவ பயிற்சி நடவடிக்கைகளும் காணப்படுகிறது. மேலும், கிரிமியா தீபகற்பத்தின் வடமேற்கு கடற்கரையிலும் ராணுவம் குவிக்கப்படுகிறது. பெல்லாரஸ் பகுதியிலும் இதே நிலை தான். உக்ரைனில் இருந்து 25 கிலோமீட்டர் முதல் 45 கிலோமீட்டர் வரையில் ராணுவத்தைக் குவித்து வருகிறது. இவை அனைத்தையும் காட்டிலும் மேற்கு ரஷ்யாவில் அதிகப்படியான ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது. மேலும், அதி நவீன ஆயுதங்களும் கூட தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது.

எச்சரிக்கை
கடந்த 2014ஆம் ஆண்டு உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரிமியா மீது படையெடுத்து ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்ட போது, பிரசார வீடியோக்களை வெளியிட்டது போலவே ரஷ்யா இப்போது பிரசார வீடியோக்களை வெளியிடத் தொடங்கியுள்ளது. இது ரஷ்யா போருக்கான போர் தொடுக்கத் தயாராக உள்ளதையே காட்டுவதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நிலைமை எப்போது வேண்டுமென்றாலும் கையை மீறிப் போகலாம் என்பதால் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளும் உக்ரைன் நாட்டுத் தூதரகத்தில் உள்ள அத்தியாவசியமற்ற ஊழியர்களைத் திரும்ப அழைத்துள்ளது.

விளக்கம்
மேலும், உக்ரைன் மீது போர் தொடுத்தால், ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்க உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளன.இருப்பினும், மேற்குலக நாடுகள் தேவையில்லாத ஊகங்கள் தெரிவித்து வருவதாகவும் உக்ரைன் மீது போர் தொடுக்கும் எண்ணம் இல்லை என்றும் ரஷ்யா தொடர்ந்து தெரிவித்து வருகிறது. சமீபத்தில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூட ரஷ்யா அதிபரை நேரில் சந்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications