பட்டினியால் தவிக்கும் இந்திய குழந்தைகள்! பாகிஸ்தான், வங்கதேசத்தை விட மோசம்.. ஆய்வில் ஷாக்
டெல்லி: சர்வதேச அளவில், இந்தியாவில்தான் பட்டினியால் வாடும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான், வங்கதேசத்தை காட்டிலும் இந்தியாவில் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று ஆய்வு கூறுகிறது.
24 மணி நேரத்தில் குழந்தைகள் எதையும் சாப்பிடாமல் பட்டினியாக இருப்பதை 'ஜீரோ-ஃபுட்' என்று கூறுவார்கள். இது குறித்த ஆய்வுதான் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2010 மற்றும் 2021க்கு இடையில் பல்வேறு காலங்களில் குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட 92 நாடுகளில் உள்ள சுகாதார ஆய்வுகளின் அடிப்படையில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

இந்த ஆய்வு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மக்கள் நல ஆய்வாளர் எஸ்.வி.சுப்ரமணியன் மற்றும் அவரது குழுவால் நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவுகள் ஜமா நெட்வொர்க் ஓப்பனில் வெளியிடப்பட்டது . இதில்தான் இந்தியாவில் 'ஜீரோ-ஃபுட்' குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது.
இந்தியாவில் 6-23 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. மொத்தமாக 60 லட்சம் குடும்பங்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆய்வில் சுமார் 59 லட்சம் குழந்தைகள் 'ஜீரோ-ஃபுட்' பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. தேசிய அளவில் 19.3% குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், இந்தியாவை விட வளர்ச்சியில் பின்தங்கியிருக்கும் நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசத்தை விட 'ஜீரோ-ஃபுட்' பிரச்னையால் இந்திய குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் 9.2%, வங்க தேசத்தில் 5.6%, காங்கோவில் 7.4%, நைஜீரியாவில் 8.8% மற்றும் எத்தியோப்பியாவில் 14.8% குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நாடுகளை விட இந்தியாவில்தான் அதிக குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்தியாவில் 'ஜீரோ-ஃபுட்' குழந்தைகளின் சதவீதம் 2016ல் 17.2%ஆக இருந்தது. ஆனால், 2021ல் இது 17.8%ஆக அதிகரித்துள்ளது. 'ஜீரோ-ஃபுட்' பிரச்னைக்கு உணவு பற்றாக்குறை காரணம் இல்லை என்றும், உணவளிக்க பெற்றோருக்கு போதுமான நேரம் கிடைக்காததால்தான் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது பெற்றோர்கள் குடும்பத்தின் வருமானத்திற்காக எந்நேரமும் வேலை செய்துக்கொண்டே இருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். எனவே குழந்தைகளுக்கு போதுமான உணவை கொடுக்க முடிவதில்லை என்று கூறியுள்ளனர்.
இந்தியாவில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான் 'ஜீரோ-ஃபுட்' பிரச்னையால் அதிக குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதாவது உத்தரப் பிரதேசத்தில் 27.4%, சத்தீஸ்கரில் 24.6%, ஜார்கண்ட் 21%, ராஜஸ்தான் 19.8% மற்றும் அசாமில் 19.4% குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று ஆய்வு தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications