எப்போது, எவ்வளவு வேக்சின் வாங்கினீர்கள்? முழு லிஸ்ட் தேவை.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
டெல்லி: மத்திய அரசு தனது வேக்சின் கொள்முதலின் முழு விவரத்தையும் தேதி வாரியாக பிரமாண பத்திரமாக 2 வாரங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. வேக்சின் அளிப்பதில் இருக்கும் சீரற்ற தன்மை, வேக்சின் கொள்முதலில் செய்யப்பட்டுள்ள தவறுகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு, ஆக்சிஜன் படுக்கை தட்டுப்பாடு என்று பல விஷயங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் விசாரித்து வருகிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் எல்.என்.ராவ் மற்றும் எஸ்.ரவீந்திர பட் ஆகிய மூன்று பேர் கொண்ட பெஞ்ச் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
வேக்சின் இல்லாமல் அறிவிப்பு மட்டும் ஏன்.. தடுப்பூசி கொள்கையே எங்களுக்கு புரியவில்லை.. டெல்லி ஐகோர்ட்
வேக்சின் கொள்கை
மத்திய அரசின் வேக்சின் கொள்முதல் மற்றும் விநியோக கொள்கையை கடந்த அமர்வில் கடுமையாக விமர்சித்த உச்ச நீதிமன்றம், மக்களின் வாழும் உரிமையை சீர்குலைப்பது போல மத்திய அரசின் வேக்சின் கொள்கை இருப்பதாக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இன்று நடந்த விசாரணையிலும் மத்திய அரசின் வேக்சின் கொள்கையை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.
கடுமை
மத்திய அரசின் வேக்சின் கொள்கை பகுத்தறிவற்றது என்று கடுமையான வார்த்தையை பயன்படுத்தி உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய் சந்திரசூட் அமர்வு மத்திய அரசை விமர்சனம் செய்தது. இன்றைய நாள் விசாரணையின் முடிவில் மத்திய அரசின் வேக்சின் கொள்முதலின் முழு விவரத்தையும் பிரமாண பத்திரமாக சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வேக்சின் வாங்கியது தொடர்பான முழு வரலாற்றையும் நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வேக்சின் கொள்முதல்
இந்த உத்தரவின்படி மத்திய அரசு பின் வரும் விஷயங்களை தனது பிரமாண பத்திரத்தில் விவரமாக தாக்கல் செய்திருக்க வேண்டும். அதன்படி, மத்திய அரசு இன்றைய தேதி வரை எவ்வளவு கோவாக்சின், கோவிட்ஷீல்ட், ஸ்புட்னிக் வி வேக்சின்களை வாங்கி உள்ளது, என்று கூற வேண்டும். இனி மக்களுக்கு மூன்று கட்டங்களாக மத்திய அரசு எப்படி வேக்சின் போட போகிறது, எப்போது போட போகிறது, என்று முழு திட்டத்தையும் நீதிமன்றத்திடம் தெரிவிக்க வேண்டும்.
ஆர்டர்
அதோடு (a) 3 விதமான வேக்சின்கள் வாங்குவதற்கும் எப்போது ஆர்டர் கொடுக்கப்பட்டது (b) தேதி வாரியாக எப்போது எவ்வளவு வேக்சின் ஆர்டர் கொடுக்கப்பட்டது (c) எப்போது இந்த வேக்சின் பெறப்பட்டது, அது எப்போது சப்ளை செய்யப்படும் என்ற விவரங்களை வெளியிட வேண்டும். அதோடு இதுவரை எத்தனை பேர் ஒரு டோஸ் வேக்சின் பெற்றுள்ளனர், எத்தனை பேர் இரண்டு டோஸ் வேக்சின் பெற்றுள்ளனர் என்று கூற வேண்டும்.
கிராமம் நகரம்
இதில் கிராமங்களில் எவ்வளவு பேருக்கு வேக்சின் கொடுக்கப்பட்டுள்ளது, நகரங்களில் எவ்வளவு பேருக்கு வேக்சின் கொடுக்கப்பட்டுள்ளது என்ற விவரமும் இடம்பெற வேண்டும். அதேபோல் கருப்பு பூஞ்சைக்கு எதிராக மத்திய அரசு எவ்வளவு மருந்துகளை வாங்கி உள்ளது. அந்த மருந்து எவ்வளவு கையிருப்பு உள்ளது என்ற விவரத்தையும் வெளியிட வேண்டும்.
மாநில அரசு
இன்னும் 2 வாரங்களில் இந்த அணைத்து விவரங்களும் அடங்கிய பிரமாண பத்திரம் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மூலம் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதோடு மாநில அரசுகளும் தங்களின் வேக்சின் கொள்கை குறித்தும், மக்களுக்கு வேக்சின் இலவசமாக கொடுக்கப்படுகிறதா என்பதை குறித்தும் பிரமாண பாத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு ஜூன் 30 தேதி விசாரிக்கப்படும் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.