ஒப்புகை சீட்டுகளை ஏன் வாக்காளர்களிடம் தரக்கூடாது.. சுப்ரீம் கோர்ட் கேள்வி! தேர்தல் ஆணையம் பரபர பதில்
டெல்லி: விவிபேட் இயந்திரங்களில் வரும் ஒப்புகை சீட்டுகளை முழுமையாக எண்ண வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
நமது நாட்டில் தேர்தலுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இதில் மோசடி நடக்க வாய்ப்புள்ளதாக பலரும் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்கள். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் சிலர் வழக்கு தொடந்தனர்.

இது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் சில முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளது. இன்று இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு விசாரணை மணிக்கணக்கில் தொடர்ந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட்டும் சில முக்கிய கருத்துகளை தெரிவித்தது.
சுப்ரீம் கோர்ட்: தேர்தல் நடைமுறையில் புனிதம் இருக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் சுப்ரீம் கோர்ட், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்ய பின்பற்றப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம் விரிவாக விளக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. தவறான எதுவும் நடக்கவில்லை என்று யாரும் அஞ்சாத நிலையே இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி தீபாங்கர் தத்தா அமர்வு கூறியது.
வழக்கறிஞர்: மனுதாரர் ஒருவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிஜாம் பாஷா, "வாக்காளர் ஒருவர் வாக்களித்த பிறகு வரும் விவிபிஏடி சீட்டை அவரே தனது கைப்பட எடுத்து வாக்குப்பெட்டியில் போட அனுமதிக்க வேண்டும்" என்றார். அப்போது குறுக்கிட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், அத்தகைய செயல்முறை வாக்காளரின் தனியுரிமையை பாதிக்காதா என்று கேட்டனர். அதற்குபதிலளித்த வழக்கறிஞர், "வாக்காளரின் தனியுரிமையை வாக்காளர்களின் உரிமைகளை தோற்கடிக்க பயன்படுத்த முடியாது" என்றார்.
அப்போது வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கூறுகையில், "இல்லையென்றால் விவிபிஏடி இயந்திரத்தில் உள்ள லைட் எப்பொழுதும் எரிந்து கொண்டே இருக்க வேண்டும்.. இப்போது அது ஏழு வினாடிகள் மட்டும் எரிகிறது. அதற்கு பதிலாக அதன் லைட் எப்போதும் எரிவது போல இருக்கலாம். அப்போது நம்மால் ஒப்புகை சீட்டு வருவதையும் அதில் விழுவதையும் பார்க்க முடியும்" என்றார்.
எடுத்துச் செல்ல முடியமா: தொடர்ந்து விவிபேட் எப்படி ஒதுக்கப்படுகிறது, அது அப்படி எடுத்துச் செல்லப்படுகிறது, 5% ஒப்புகை சீட்டுகளை எப்படி ஒப்பிட்டு பார்க்கிறார்கள் என்று பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அப்போது ஒரு கட்டத்தில் குறுக்கிட்ட நீதிபதிகள், "வாக்களித்த பிறகு ஒப்புகை சீட்டைப் பெற முடியுமா" என்று தேர்தல் ஆணையத்திடம் கேட்டது.
இது வாக்குகளின் ரகசியத்தை சமரசம் செய்யும் என்றும், வாக்குச்சாவடிக்கு வெளியே தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றும் தேர்தல் ஆணையம் பதிலளித்தது. அப்போது நீதிமன்றம், "மற்றவர்களால் இதை எப்படிப் பயன்படுத்தலாம் என்று நாம் சொல்ல முடியாது," என்று அது கூறியது.
ஏன் எண்ணக்கூடாது: மேலும் விவிபேட் சீட்டுகளை ஏன் எண்ணக்கூடாது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில், "அது எண்ணுவதற்கு ஏன் அதிக நேரம் எடுக்கும்" என்று பதில் அளித்தது. அந்த சீட்டுகளை எண்ண ஏன் இயந்திரங்களைப் பயன்படுத்த கூடாது என்று நீதிமன்றம் கேட்டது. அதற்கு அந்தத் தாள் மெல்லியதாகவும், ஒட்டும் தன்மையுடனும் இருப்பதாகவும், உண்மையில் அது எண்ணுவதற்கு அல்ல என்றும் தேர்தல் ஆணையம் கூறியது.
இப்படி இரு தரப்பும் இரு வேறு வாதங்களை முன்வைத்தன. நீண்ட விசாரணைக்கு பிறகு, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தன. லோக்சபா தேர்தல் ஒரு பக்கம் இப்போது நடக்கும் நிலையில், இந்த வழக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications