ஆண்களுடன் உறவு கொள்ளும் ஆண்கள், திருநங்கை, பாலியல் தொழிலாளிகள் ரத்த தானம் செய்ய கூடாது! மத்திய அரசு
டெல்லி: ரத்த தானம் தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது யாரெல்லாம் இந்தியாவில் ரத்த தானம் செய்யக்கூடாது என்பது தொடர்பாக மத்திய அரசு முக்கியமான விளக்கத்தைக் கொடுத்துள்ளது. பாலியல் சார்ந்த நோய்கள் பரவும் என அஞ்சப்படும் குழுக்கள் ரத்த தானம் செய்யக்கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ரத்த தானத்திற்கான விழிப்புணர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. யாரோ ஒருவரது உயிரைக் காப்பாற்ற முடியும் என்பதால் மக்களும் கூட இப்போது எல்லாம் ரத்த தானம் செய்தே வருகிறார்கள். இதற்கிடையே யார் எல்லாம் ரத்த தானம் செய்யலாம்.. யார் செய்யக்கூடாது என்பது தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.

ரத்த தானம்
தேசிய ரத்த மாற்று கவுன்சில் மற்றும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட, 'ரத்த தானம் செய்பவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மற்றும் பரிந்துரைப்பதற்கான வழிகாட்டுதல்கள், 2017'ஐ எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தான் மத்திய அரசு முக்கிய தகவல்களை முன்வைத்தது.
யார் செய்யக்கூடாது
அதாவது திருநங்கைகள், ஆண்களுடன் பாலுறவு கொள்ளும் ஆண்கள், மற்றும் பெண் பாலியல் தொழிலாளர்கள் ஆகியோர் ரத்த தானம் செய்ய முடியாது. பாலியல் தொற்று ஏற்படும் அதிக ஆபத்துள்ள நபர்கள் ரத்த தானம் செய்வதை தடைசெய்வது இதன் நோக்கமாகும். கடந்த 2017ம் ஆண்டிலேயே இது தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டுதல்களை அளித்திருந்த சூழலில், இப்போது அதை உறுதிப்படுத்தி உள்ளது. இந்த மக்கள் எல்லாம் ரிஸ்க் க்ரூப்பில் இருப்பவர்கள் என்பதாலேயே அனுமதி மறுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுச் சுகாதாரம் என்பது தனிநபர் உரிமைகளை விட உயர்ந்தது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
இதில் மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்ய பாட்டி, "வல்லுநர்கள் ஆலோசனைப்படியே இந்த வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பொது நலனைக் கருத்தில் கொண்டே இந்த விதிகளை வகுத்துள்ளோம். மேலும், இந்த வழிகாட்டுதல்களை நீர்த்துப்போகச் செய்தால் அது உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கலாம்" என்றார்.
மத்திய அரசு
மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், "இந்த விவகாரத்தைத் தனிநபர் உரிமைகள் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. மாறாக பொதுச் சுகாதார கண்ணோட்டத்தில் பார்க்கப்பட வேண்டும். பாதுகாப்பான ரத்தத்தைப் பெறுபவரின் உரிமையே தானம் செய்பவரின் தனிப்பட்ட உரிமையை விட மிகவும் முக்கியமானது" என்று தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர்
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெயனா கோத்தாரி, "பாலினம் அல்லது பாலியல் அடையாளத்தின் அடிப்படையில் மக்களைப் பாகுபடுத்துவது தவறு.. இப்படி ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் தடை விதிப்பதற்குப் பதிலாக எச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி, மற்றும் ஹெபடைடிஸ் சி போன்ற வைரஸ்களின் மரபணுப் பொருட்களைக் கண்டறியும் நியூக்ளிக் ஆசிட் டெஸ்டிங் மேற்கொள்ளலாம். இது சிறந்த பாதுகாப்பை வழங்கும் . ஆபத்தானது என்பது பாதுகாப்பற்ற பாலுறவு மட்டுமே. அதை விட்டுவிட்டு ஒருவரது பாலியல் அடையாளம் என்பது அவரை ஆபத்தான நபராக மாற்றாது" என்றார்.
உச்ச நீதிமன்றம்
இருப்பினும், நீதிமன்றம் இதில் தலையிடத் தயக்கம் காட்டியது. நாட்டில் ஏழை மக்கள் பல கோடி பேர் இலவச ரத்த மாற்று வசதிகளைப் பெற அரசு மருத்துவமனைகளே சார்ந்து இருக்கிறார்கள். அவர்களால் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியாது. அப்படியிருக்கும்போது அவர்களுக்கு ஒரு சதவீதம் கூட நோய் ஏற்படும் ஆபத்து இருக்கக்கூடாது எனத் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கை விரிவாகப் பின்னர் விசாரிப்பதாக நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.












Click it and Unblock the Notifications