Bihar SIR: தவறு நடந்தால்.. சார் நடவடிக்கையை மொத்தமாக ரத்து செய்வோம்.. சுப்ரீம் கோர்ட் சொன்ன மிக முக்கிய கருத்து
டெல்லி: பீகாரில் வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக அங்கு மேற்கொள்ளப்படும் சார் நடவடிக்கை பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பல முக்கிய கருத்துகளைக் கூறினர். குறிப்பாகச் சார் நடவடிக்கையில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் இந்த நடைமுறையே ரத்து செய்யப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
பீகாரில் வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக தேர்தல் ஆணையம் அங்குச் சார் எனப்படும் சிறப்புத் தேர்தல் சீர்திருத்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இருப்பினும், இந்த நடவடிக்கை தொடங்கியதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. பல அமைப்பினர் இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

சார் நடவடிக்கை
இந்த சார் நடவடிக்கை கீழ் பீகார் வாக்காளர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும். இதற்காக அவர்கள் தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட 11 ஆவணங்களில் எதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். இந்த நடவடிக்கை முடிந்து இப்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை 65 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நடைமுறையை எதிர்த்து பல்வேறு அமைப்புகளும் பல கட்சிகளும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. சூர்யா காந்த் மற்றும் ஜாய்மால்யா பக்சி ஆகியோர் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இதில் பல காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதில் நீதிபதிகள் தரப்பிலும் பல முக்கிய கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
ரத்து செய்வோம்
இந்த சார் நடவடிக்கையில் சட்டவிரோதச் செயல்கள் நிரூபிக்கப்பட்டால், இந்த பிராசஸ் ரத்து செய்யப்படலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. நீதிபதிகள் மேலும், "சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் என்ற பெயரில் 5 கோடி வாக்காளர்களை நீக்கினால் நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. இந்த நடைமுறையில் சட்டவிரோதச் செயல்முறைகள் கண்டறியப்பட்டால் ஒட்டுமொத்த நடைமுறையும் ரத்து செய்யப்படும்" என்றனர்.
அதாவது சார் நடவடிக்கையில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் ஒட்டுமொத்த சார் நடவடிக்கையும் ரத்து செய்யப்படலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்தக் கருத்து மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. சார் நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் இது தீர்ப்பு இல்லை என்ற போதிலும் உச்ச நீதிமன்றம் இப்படியொரு கருத்தைக் கூறியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பீகார் சார் நடவடிக்கைக்கு எதிராகப் பல்வேறு அமைப்புகளும் எதிர்க்கட்சியினரும் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அவர்கள் நீதிமன்றத்தின் இந்த கருத்தை வரவேற்றுள்ளனர்.
அதிகாரமே இல்லை
முன்னதாக இன்று நடைபெற்ற விசாரணையில், தேர்தல் ஆணையம் குடிமகன் என்பதை நிரூபிக்க ஆவணங்களைக் கோரியிருக்கிறது.. ஆனால் குடியுரிமை குறித்து முடிவெடுக்கத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்று மனுதாரர்கள் சுட்டிக்காட்டினர். குடியுரிமை என்பது மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகார வரம்புக்குட்பட்டது என்று மனுதாரர்கள் வாதிட்டனர்.
மேலும், மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, "ஆதார் குடியுரிமையை நிர்ணயிக்கப் போதுமானதல்ல என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது.. ஆனால் அவர்களுக்குக் குடியுரிமையைத் தீர்மானிக்க அதிகாரமே இல்லை. தேர்தல் ஆணையம் குடியுரிமையின் காவலராக இருக்கவில்லை. ஐந்து கோடி மக்களின் குடியுரிமை எப்படி ஒரு அமைப்பு சந்தேகப்படலாம்" என்றார்.
காங்கிரஸ் தாக்கு
எதிர்க்கட்சிகளும் இந்த சார் நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்து வருகிறது. இது பீகாரில் நடவடிக்கை விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து அகற்றுவதாக ராகுல் காந்தி சாடினார். காங்கிரஸுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்களிப்பவர்களே இதன் மூலம் நீக்கப்படுவதாகவும் விமர்சித்தார். இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தியிருந்தனர்.












Click it and Unblock the Notifications