”வெறுப்பு பேச்சு”.. பிரிட்டன் சேனலுக்கு கிடைத்த ”தண்டனை” - இந்திய சேனல்களை எச்சரித்த உச்சநீதிமன்றம்
டெல்லி: பிரிட்டனில் வெறுப்பு பேச்சை ஒளிபரப்பிய ஒரு தொலைக்காட்சிக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம், இந்திய தொலைக்காட்சிகள் வெறுப்பு பேச்சுக்களை ஒளிபரப்பி அதை வைத்து லாபம் அடைய நினைக்கும் அரசியல் வாதிகளுக்கு களம் அமைத்துக் கொடுப்பதாக விமர்சித்துள்ளது.
நாடு முழுவதும் அதிகரித்து வரும் மதவெறுப்பு பேச்சுக்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் எழுதிய மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை கடந்த ஜூலை மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிபதிகள் சக்தி வாஹினி மற்றும் தெஹ்சீன் பூனாவல்லா அமர்வு வெறுப்பு பேச்சுக்கள் தொடர்பாக அளித்த தீர்ப்பை அடிப்படையாக கொண்டு மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
வெறுப்பு பேச்சு.. அரசு இன்னும் ஏன் அமைதியாக இருக்கிறது?.. கண்டிப்புடன் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
நெறியாளர்கள்
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் ரிஷிகேஷ் ராய் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜோசப், "தொலைக்காட்சி சேனல்களின் நெறியாளர்கள் விவாதத்துக்கு வரும் விருந்தினர்கள் எல்லையை மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நெறியாளர் பணி என்பது மிகவும் நெருக்கடியானது.
தடுக்க வேண்டும்
தொலைக்காட்சி சேனல்கள் வெறுப்பு பேச்சுக்களை தடுக்க வேண்டும். இதில் முக்கியமான தொலைக்காட்சிகளில் இதுபோன்ற பிரச்சனைகள் இன்னும் அதிகளவில் இருக்கின்றன. இதுபோன்ற வெறுப்பு பேச்சுக்கள் தொலைக்காட்சி சேனல்களிலும் சமூக வலைதளங்களிலும் கட்டுபாடுகள் இன்றி சென்றுகொண்டிருக்கின்றன.
கொலையை போன்றது
எந்த அளவுக்கு கருத்து சுதந்திரம் முக்கியமோ அதே அளவுக்கு வெறுப்பு பிரச்சாரங்களை தடுக்க வேண்டும். பிரிட்டனில் வெறுப்பு பேச்சை ஒளிபரப்பிய ஒரு தொலைக்காட்சிக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டது. வெறுப்பு பேச்சுக்கள் ஒருவரை கொலை செய்வதை போன்று பல்வேறு அடுக்குகளை கொண்டது. ஒருவரை மெதுவாகவோ அல்லது வேகமாகவோ கொலை செய்ய முடியும். அதே போன்றது வெறுப்பு பேச்சுக்கள்.
மத்திய அரசின் அமைதி
சில நம்பிக்கைகளின் அடிப்படையில் வெறுப்பு பேச்சுக்கள் ஈர்க்கப்படுகின்றன. மத்திய அரசு ஏன் இன்னும் வெறுப்பு பேச்சுக்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த வெறுப்புப் பேச்சுக்களின் காரணமாக அரசியல்வாதிகளே அதிகம் பயன்பெறுகிறார்கள். அவர்களுக்கான களத்தை தொலைக்காட்சி சேனல்கள் அமைத்துக் கொடுக்கின்றன." என்றார்.