மம்தாவுக்கு பெரிய அதிர்ச்சி! "உங்க கோரிக்கையை ஏற்க முடியாது!" உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், நாளை மறுநாள் மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் பணிகள் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இருப்பினும், இந்த வழக்கில் சாதகமான முடிவு திரிணாமுல் கட்சிக்குக் கிடைக்கவில்லை.
அதன்படி வரும் திங்கள்கிழமை மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தில் ஒரு முக்கிய யுத்தமே நடந்து முடிந்துள்ளது என சொல்லலாம். அதாவது வாக்கு எண்ணிக்கை மையங்களில் யாரை நியமிக்க வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையத்திற்கும், மம்தா பானர்ஜிக்கும் இடையே பெரும் மோதலை நடந்துள்ளது.

வழக்கு
வாக்கு எண்ணிக்கையின் போது மத்திய அரசு ஊழியர்களை மட்டுமே மேற்பார்வையாளர்களாக நியமிக்க உள்ளதாகத் தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்தது. இருப்பினும், இந்த முடிவு நடுநிலையைப் பாதிக்கும் என எதிர்த்த திரிணாமுல் காங்கிரஸ் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தது. நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இருப்பினும், தனது அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை தேர்தல் ஆணையத்திற்கு உண்டு என்று கூறி திரிணாமுல் காங்கிரஸின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிமன்றம் மேலும், "பணியில் இருக்கும்போது அனைத்து ஊழியர்களும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிலேயே இருப்பார்கள்.. அவர்கள் மத்திய அரசு ஊழியர்களா அல்லது மாநில அரசு ஊழியர்களா என்பது முக்கியமல்ல" என்று தெளிவுபடுத்தியது.
வாதம்
முன்னதாக வழக்கு விசாரணையின்போது திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "அரசியலமைப்புச் சட்டத்தின் 324வது பிரிவைப் பயன்படுத்தித் தேர்தல் ஆணையம் இதைச் செய்துள்ளது. ஆனால், அந்த சட்டம் ஒன்றும் யாருக்கும் கட்டுப்படாதது இல்லை.. தேர்தல் ஆணையம் நினைத்த நேரத்தில் எதை வேண்டுமானாலும் செய்ய முடியாது" என்று வாதிட்டார்.
தள்ளுபடி
இருப்பினும், தேர்தல் ஆணையம் இதற்கு ஒரு விளக்கத்தை அளித்தது.. அதாவது, "ஒரு மேஜையில் மேற்பார்வையாளர் மத்திய அரசு ஊழியராக இருந்தால், அவருக்கு உதவியாளராக மாநில அரசு ஊழியர் நியமிக்கப்படுவார். இதன் மூலம் ஒவ்வொரு மேஜையிலும் குறைந்தது ஒரு மாநில அரசு அதிகாரி இருப்பார்" என ஆணையம் உறுதி அளித்தது. இந்த வாதத்தைக் கேட்ட பிறகே மனுவைத் தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னணி
முன்னதாக ஏப்ரல் 29ம் தேதி நடந்த இரண்டாம் கட்டத் தேர்தலின் போதே களத்தில் அனல் பறந்தது. அப்போது உ.பியை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியும் மேற்கு வங்க தேர்தல் பார்வையாளருமான அஜய் பால் சர்மா, திரிணாமுல் வேட்பாளருக்குக் கடும் எச்சரிக்கை விடுத்தது சர்ச்சையானது. அதற்கு அந்த திரிணாமுல் வேட்பாளர், "அஜய் பால் சிங்கம் போலீஸ் என்றால் நான் புஷ்பா" எனப் பதிலடி கொடுத்திருந்தார்.
அதேபோல அன்றைய தினம் வாக்குப்பதிவு முடிந்த கையோடு, கொல்கத்தாவில் உள்ள ஸ்ட்ராங் ரூம்களில் முறைகேடு நடப்பதாக திரிணாமுல் புகாரை முன்வைத்தது.. நள்ளிரவில் நேரடியாகக் களமிறங்கிய முதல்வர் மம்தா பானர்ஜி, ஒரு மையத்தில் சுமார் 4 மணி நேரம் ஆய்வு நடத்தினார். இருப்பினும், முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்றும் சிசிடிவி எல்லா மையங்களிலும் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் கொடுத்தது!












Click it and Unblock the Notifications