ஜெ.வுக்கு எதிரான பரிசுப்பொருள் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி.. செங்கோட்டையனும் விடுவிப்பு
டெல்லி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான பரிசுப்பொருள் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1992ம் ஆண்டு முதல்வராக இருந்த காலகடடத்தில் பிறந்த நாள் கொண்டாடினார். அப்போது அவருக்கு பிறந்த நாள் பரிசாக பல பரிசுகள், காசோலைகள், வரைவோலைகள்,அமெரிக்க டாலர்கள் வந்தன. அவருக்கு வந்த பரிசு பொருட்களுடைய மதிப்பு 1992ம் ஆண்டில் ரூ.2 கோடி ஆகும்.

ஒரு முதல்வருக்கு வரும் பரிசுத் தொகை அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட வேண்டும். ஆனால், அவர் அதை அவ்வாறு சேர்க்காமல், ஜெயலலிதா தன்னுடைய சொந்த வங்கிக் கணக்கில் சேர்த்துக் கொண்டார். இது தொடர்பாக ஜெயலலிதா, அழகு திருநாவுக்கரசு மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஜெயலலிதாவுக்கு அன்றைய அமைச்சர்கள் செங்கோட்டையனும், அழகு திருநாவுக்கரசரும் டாலர்களை பரிசாக வழங்கியதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து பின்னர் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் 2012ம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் இருந்தது.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் அப்போது அமைச்சராக இருந்த அழகு திருநாவுக்கரசுவும் இறந்துவிட்ட நிலையில் அவர்கள் மீதான வழக்கு கைவிடப்பட்டது. இந்த சூழலில் இந்த வழக்கு தற்போதைய கல்வி அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிராக மட்டும் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி பானுமதி அமர்வு இன்று விசாரணை நடத்தியது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு 20 ஆண்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இதில் உடனே தீர்ப்பு வழங்க வேண்டும் என்றார்.
அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள், 23 ஆண்டுகளாக இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. சிபிஐ இதுநாள் வரை என்ன செய்து கொண்டிருந்தது என்று கேள்வி எழுப்பினர். மேலும் சிபிஐ தாக்கல் செய்த ஜெயலிதாவுக்கு எதிராக பரிசுப்பொருள் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்கள். இதன் மூலம் இந்த வழக்கில் இருந்து அமைச்சர் செங்கோட்டைனும் விடுவிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications