கர்நாடகாவில் நடைபெறவிருந்த 15 தொகுதி இடைத் தேர்தலுக்கு தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி.. காரணம் இதுதான்
Recommended Video
டெல்லி: கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதை தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டது.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சியே, கவிழும் வகையில் அடுத்தடுத்து 17 ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் கூட்டணி அரசு கலைந்தது. இதுதொடர்பாக ஆளுங்கட்சியினர் அளித்த புகாரை பரிசீலித்த, அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார், ராஜினாமா செய்த 17 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்த சட்டசபையின் பதவி காலம் இருக்கும் வரை அவர்கள் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது என்றும் உத்தரவிட்டார்.
சபாநாயகர் உத்தரவை எதிர்த்து 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் இதில் 15 தொகுதிகளுக்கு மட்டும், அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
எனவே அந்த 15 தொகுதிகளிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது தகுதி நீக்கத்திற்கு உள்ளாகியுள்ள மாஜி எம்எல்ஏக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். இடைத் தேர்தலில் தங்களை போட்டியிட அனுமதிக்க வேண்டும் அல்லது இடைத்தேர்தலை நாங்கள் தாக்கல் செய்துள்ள முக்கிய வழக்கில் தீர்ப்பு வரும்வரை நடத்தக்கூடாது என்று கேட்டுக் கொண்டனர்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை இடைத் தேர்தலை நடத்தக் கூடாது என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், விசாரணையை அக்டோபர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவு காரணமாக, தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். மற்றொரு பக்கம் இப்போதைய நிலையில் அரசுக்கு பெரும்பான்மை இருப்பதால் எடியூரப்பாவும் நிம்மதி அடைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications