முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு.. உச்சநீதிமன்றம்
டெல்லி: முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு மாநில அரசுகள் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்பில் மொத்த இடங்களில் 50 சதவீதம் இடங்கள் கிராமங்களில் தொலைதூர பகுதிகள் மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.
மருத்துவமனைகளில் சேவையாற்றிய மருத்துவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அவர்கள் தொடர்ந்து கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதை ஊக்குவிக்கவே இந்த சலுகை வழங்கப்பட்டது.

தமிழகத்தில்
ஆனால் இந்த சலுகையை இந்திய மருத்துவக் கவுன்சில் கடந்த 2017ஆம் ஆண்டு ரத்து செய்தது. அதாவது அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான மாணவர் சேர்க்கை முறை அமல்படுத்த வேண்டும் என கூறி தமிழக மாணவர்களின் சலுகையை பறித்தது. நாட்டிலேயே தமிழகத்தில் மட்டுமே இந்த சலுகை ஏற்படுத்தப்பட்டது.

செல்லாது
இதையடுத்து கிராமப்புற பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர ஊக்க மதிப்பெண் வழங்கும் திட்டம் தமிழக அரசால் கொண்டு வரப்பட்டது. அதில் குளறுபடிகள் இருப்பதாகக் கூறி அந்த திட்டத்தை செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.

சுப்ரீம் கோர்ட்
இது போன்ற தொடர் தடைகளால் கிராமப்புறங்களில் பணியாற்ற விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியது. இதையடுத்து இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளை எதிர்த்து மருத்துவர்கள் சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

தீர்ப்பு
இந்த வழக்கை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வு விசாரணை நடத்தியது. அதன்படி முதுநிலை மருத்துவப் படிப்புகளில் கிராமப்புற மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டை அந்தந்த மாநில அரசுகளே தீர்மானித்து வழங்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதைத் தடுக்க இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கே கூட உரிமையில்லை என அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications