மதுபான கொள்கை கேஸ்: சந்திரசேகர ராவ் மகள் கவிதா ஜாமீன் பெற்றார்! சிபிஐக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும் அம்மாநில எம்.எல்.சியுமான கவிதாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது. கவிதா படித்தவர், எம்.எல்.சியாக இருப்பவர் என்பதாலேயே ஜாமீன் தர டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்தது தவறானது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் மதுபான கொள்கை பெரும் சர்ச்சையானதால் அது திரும்பப் பெறப்பட்டது. இந்த மதுபான கொள்கை அறிவிப்பில் பெரும் முறைகேடு நிகழ்ந்திருப்பதாகவும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கையால் ஆதாயம் அடையும் நிறுவனத்துக்கும் கவிதாவுக்கும் தொடர்பிருப்பதால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் கவிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்களை நீதிமன்றங்கள் நிராகரித்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இதனிடையே அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் இருந்து டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 17 மாத சிறைவாசத்துக்குப் பின்னர் நிபந்தனைகளுடன் மணீஷ் சிசோடியா ஜாமீனில் விடுதலையானார். இதனால் கவிதாவுக்கும் ஜாமீன் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றம் இன்று கவிதாவின் ஜாமீன் மனு மீது விசாரணை நடத்தியது. இன்றைய விசாரணையின் போது, இந்த வழக்கை சிபிஐ நேர்மையாகத்தான் நடத்துகிறதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் கவிதா படித்தவர்; எம்.எல்.சி. என்ற காரணத்துக்காகவே அவருக்கு ஜாமீன் தர முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது தவறானது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். பின்னர் இந்த வழக்கில் பிஆர்எஸ் எம்.எல்.சி. கவிதாவுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications