அரசும் பேனர் வைக்க கூடாது.. வழக்கு போட்ட டிராபிக் ராமசாமி.. கொள்கை முடிவு.. உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: தமிழகத்தில் பேனர்களுக்கு தடை விதிக்க டிராபிக் ராமசாமி விடுத்த கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
சாலை ஓரத்தில் வைக்கப்பட்ட பேனர் விழுந்து கோவையில் ரகு என்ற இளைஞர், சென்னையில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உள்ளிட்ட பலர் மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இதேபோல பேனர் விழுந்து மேலும் பலரும் காயமடைந்தனர். இந்தநிலையில்தான் சாலைகளில் பேனர் வைக்க, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தடை பிறப்பித்து உத்தரவிட்டது. ஆனால் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பின் போது தமிழக அரசு சார்பில் பேனர் வைக்க உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அனுமதி பெறப்பட்டது.
இதை எதிர்த்து டிராபிக் ராமசாமி தரப்பில், உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில் தமிழகத்தில் யார் பேனர் வைத்தாலும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி, தமிழக அரசு சார்பில் பேனர் வைக்கப்பட்டது. இவ்வாறு பேனர்கள் வைப்பது தமிழக மக்களிடையே தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். எனவே, தமிழக அரசு உட்பட யாரும், பேனர் வைக்க தடை விதிக்க வேண்டும் என்று டிராபிக் ராமசாமி தனது மனுவில் தெரிவித்திருந்தார். ஆனால், அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது அரசின் கொள்கை சார்ந்த விஷயம் என்பதால் நீதிமன்றம் தலையிட முடியாது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications