செந்தில் பாலாஜி வழக்கில் ‘ட்விஸ்ட்’.. சிறப்பு நீதிபதி நியமனம்! ஐகோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
டெல்லி: செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிபதியை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செந்தில் பாலாஜி மீதான வழக்கையும் சேர்த்து 29 வழக்குகளை தற்போது விசாரிக்கும் அமர்வுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால் புதிய நீதிபதியை நியமிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு கடந்த 26 ஆம் தேதி ஜாமீன் வழங்கி தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து, 15 மாதங்களுக்குப் பின்னர் செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுதலையாகி உள்ளார். சிறையில் இருந்து 471 நாட்களுக்கு பிறகு செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியே வந்து இருப்பதால் திமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

உச்ச நீதிமன்றம், செந்தில் பாலாஜிக்கு வழங்கிய நிபந்தனை ஜாமீனில் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று கையெழுத்திட வேண்டும், வழக்கின் சாட்சியங்களை கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது, பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், மாதத்தின் முதல் சனிக்கிழமை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தது.
ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகி உள்ளார். செந்தில் பாலாஜி சிறை செல்வதற்கு முன்பு வகித்து வந்த அதே இலாகாக்களுக்கு மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்று உள்ளார். செந்தில் பாலாஜி, மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக நேற்று பதவிப் பிரமாணம் ஏற்று, தலைமைச் செயலகம் சென்று கோப்புகளில் கையெழுத்து முறையாகப் பொறுப்புகளை ஏற்றார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிபதியை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிபதியை நியமிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு சம்பந்தமாக இன்னொரு வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. ஒய்.பாலாஜி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'செந்தில் பாலாஜிக்கு எதிரான இந்த வழக்கை ஒராண்டுக்குள் விசாரணை நடத்தி முடிக்க உத்தரவிட வேண்டும்' என்று கோரி இருந்தார். இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை, உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
செந்தில் பாலாஜி வழக்கை பிரத்யேகமாக விசாரிக்கும் சிறப்பு நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் எஸ் குரு கிருஷ்ணகுமார் கோரினார். அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நபாடே, செந்தில் பாலாஜியை மட்டும் ஏன் தனிமைப்படுத்த வேண்டும்? மற்ற அமைச்சர்களும் உள்ளனர் எனத் தெரிவித்தார்.
அப்போது நீதிபதி, செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை கையாள்வது தவிர, இந்த அமர்வு நீதிபதி, எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் 29 வழக்குகளை கையாள்கிறார். 20 வழக்குகள் விசாரணை நிலையில் உள்ளன. சில வழக்குகளில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை. இந்த வழக்கில் 2000க்கும் மேற்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களும், சுமார் 600 அரசு தரப்பு சாட்சிகளும் உள்ளனர் எனத் தெரிவித்தார்.
மேலும், குற்றப் பத்திரிகையில் உள்ள குற்றச்சாட்டுகளைப் பார்க்கும்போது, இந்த வழக்குகளை முன்கூட்டியே முடிக்க வேண்டும். சிறப்பு எம்.பி எம்.எல்.ஏ நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, சென்னை உயர் நீதிமன்றம் வழக்குகளை விசாரிக்க மேலும் ஒரு அமர்வு நீதிபதியை நியமிப்பது பொருத்தமானதாக இருக்கும். இந்த உத்தரவின் நகல், தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக, சென்னையிலுள்ள உயர் நீதிமன்றத்தின் மாண்புமிகு தலைமை நீதிபதியின் முன் வைக்குமாறு, சென்னை உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரலுக்கு அனுப்பப்படும்.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் சாட்சிகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் வழக்கின் அளவைக் கருத்தில் கொண்டு, வழக்கை ஏற்கனவே அதிக சுமை இல்லாத ஒரு அமர்வு நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும். நிர்வாகத் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் அடுத்த தேதிக்கு முன் இந்த நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
செந்தில் பாலாஜி மீதான வழக்கு உட்பட எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான 29 வழக்குகளை தற்போது விசாரித்து வரும் அமர்வுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால் புதிய நீதிபதியை நியமிக்க வேண்டும், மற்றொரு அமர்வு நீதிபதியை நியமிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டுக்கு உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications