காஷ்மீர் 370-வது பிரிவு நீக்கம்: வழக்கு போட்டவர் நடவடிக்கையா? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு 4 ஆண்டுகளுக்கு முன்னர் ரத்து செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அடுக்கடுக்கான வாதங்களை முன்வைத்தது. அதேநேரத்தில் மத்திய அரசு தரப்பு நோக்கி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்தது அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு. இதனை மத்தியில் ஆளும் பாஜக அரசு 2019-ல் ரத்து செய்தது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிளவுபடுத்தப்பட்டு இரு யூனியன் பிரதேசங்களாக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீரில் தற்போது வரை சட்டசபை செயல்பாடுகள் அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில் உள்ளன.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் கடந்த 10 நாட்களாக உச்சநீதிமன்றம் தொடர் விசாரணையை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் நடத்தி வருகிறது. இன்று 11-வது நாளாக விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையின் போது, அரசியல் சாசனத்தின் முகப்புரையானது சோசலிசம், மதச்சார்பின்மை ஆகியவை இல்லாமல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கும் பொருந்தக் கூடியதுதான்; மத்திய அரசின் 370-வது பிரிவு ரத்து நடவடிக்கை சரியானதே என மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். மேலும் 1964-ம் ஆண்டே ஜம்மு காஷ்மீரின் 370-வது பிரிவை நீக்க கோரும் தனிநபர் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யபப்ட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதலீடுகள் இல்லாம வளர்ச்சி என்பது சாத்தியமற்றது. தொழில் முதலீடுகளுக்கு 370வது பிரிவு தடையாக இருந்தது எனவும் துஷார் மேத்தா வாதிட்டார். தற்போது 370-வது ரத்துக்குப் பின்னர்தான் ஜம்மு காஷ்மீருக்கு முதலீடுகள் அதிக அளவில் கிடைக்கிறது; சுற்றுலாப் பயணிகளும் பெரும் எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர் என்றார் துஷார் மேத்தா.
அத்துடன் ஜம்மு காஷ்மீருக்கு 370-வது பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது என்பதே ஒரு தற்காலிக நடவடிக்கைதான்; அதை எந்த நேரத்திலும் ரத்து செய்யக் கூடிய வகையில்தான் அந்தப் பிரிவு உருவாக்கப்பட்டது எனவும் துஷார் மேத்தா குறிப்பிட்டார்.
இந்த விசாரணையின் போது Zaroor Ahmed Bhat என்ற பேராசிரியர் மீது 370-வது பிரிவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டதை பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் தலைமை நீதிபதி சந்திரசூட் வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications