மாநில அந்தஸ்து கேட்டால்.. NSA சட்டம் பாயுமா? சோனம் வாங்சுக் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: லடாக்குக்கு மாநில அந்தஸ்து கோரி நடந்த போராட்டம் சமீபத்தில் வன்முறையில் முடிவடைந்தது. இதனையடுத்து போராட்டத்தை தூண்டியதாக சூழலியலாளரும், கல்வியாளருமான சோனம் வாங்சுங் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் (NSA) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இதற்கு எதிராக அவரது மனைவி உச்சநீதிமன்றத்தை நாட்டியுள்ள நிலையில், வழக்கு குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
கடந்த 2019ம் ஆண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசு ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தது. இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் தனியாகவும், லடாக் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது.

வரவேற்பும் எதிர்ப்பும்
தொடக்கத்தில் லடாக் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டத்தை அப்பகுதி மக்கள் வரவேற்றனர். சோனம் வாங்சுக் உட்பட, இந்த நடவடிக்கை வளர்ச்சியை ஏற்படுத்தும் என்று கூறியிருந்தார். ஆனால் கடந்த 6 ஆண்டுகளில் அப்படி எந்த வளர்ச்சியும் அங்கு ஏற்படவில்லை என உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே தங்களுக்கு மாநில அந்தஸ்த்தையும், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதை போன்று அரசியலமைப்பு அட்டவணையில் உள்ள 6வது பிரிவில் லடாக்கையும் சேர்க்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்த தொடங்கினர்.
லடாக் மக்களின் போராட்டம்
மத்திய அரசு ஆரம்பத்தில், மாநில அந்தஸ்து கோரிக்கைகளை பரிசீலிப்பதாக சொன்னாலும், பின்னாட்களில் அப்படியான எந்த ஐடியாவும் இல்லை என்று மொத்தமாக கை விரித்துவிட்டது. இதனால் அதிருப்தியடைந்த உள்ளூர் மக்கள் பெரிய போராட்டங்களை நடத்த தொடங்கினர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து மாநில அந்தஸ்துக்கான கோரிக்கையை வைத்தனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. எனவே லடாக்கில் உள்ள பௌத்த பிரிவினரும், இஸ்லாமிய பிரிவினரும் சேர்ந்து இந்த கோரிக்கைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.
உண்ணாவிரத போராட்டம்
குறிப்பாக சோனம் வாங்சுங் உட்பட 15 பேர், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தொடர் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தனர். இப்படி இருக்கையில்தான் செப்.25ம் தேதி நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. லேவில் நடந்த போராட்டத்தை கலைக்க போலீசார் முயற்சிக்க, அது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையேயான மோதலாக வெடித்தது. போராட்டக்காரர்கள் பாஜக அலுவலகத்திற்கும், அரசு வாகனங்களுக்கும் தீ வைத்தனர். வன்முறையை கட்டுப்படுத்துவதாக கூறி, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இதனையடுத்து போராட்டத்தை தூண்டி விட்டதாக சோனம் வாங்சுங் உள்ளிட்டோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் மத்திய அரசு கைது செய்திருக்கிறது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக அவரது மனைவி தாஞ்சலி ஜே அங்மோ உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். இது தொடர்பான வழக்கு இன்று நீதிபதிகள் அரவிந்த்குமார், என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருக்கின்றனர். அதேபோல, வழக்கு விசாரணை அக்.14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளனர்.
போராட்டக்காரர்கள் என்ன சொல்கிறார்கள்?
லடாக்கில் வாழும் 90% மக்கள் பழங்குடியினர் ஆவார்கள். எனவே அவர்களின் வாழ்வியலை காக்க, இந்திய அரசியலமைப்பு அட்டவணையின் 6வது பட்டியலில் அசாம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்கள் சேர்க்கப்பட்டிருப்பதை போல லடாக்கும் சேர்க்கப்பட வேண்டும். குறிப்பாக லடாக்குக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டு, சட்டமன்ற தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். இது தொடர்பாக ஏற்கெனவே பாஜக வாக்குறுதியை கொடுத்திருக்கிறது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றுதான் நாங்கள் கேட்கிறோம் என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications