சர்ச்சை உத்தரவுகள்...நீதிபதியின் நிரந்தர நியமனத்தை நிறுத்தி வைக்கிறதா சுப்ரீம் கோர்ட்
டெல்லி : சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்குகளில் சர்ச்சைக்குரிய வகையில் உத்தரவு பிறப்பித்த மும்பை ஐகோர்ட் நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கனிதிவாலாவின் பணி நிரந்தர பரிந்துரையை சுப்ரீம் கோர்ட் திரும்பப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நிரந்தர நீதிபதிகள் நியமனம் அல்லது நீதிபதிகளை நிரந்தரமாக நியமிப்பதற்காக சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் அமைப்பு, மத்திய அரசுக்கு பரிந்துரை பட்டியல் அனுப்புவது தான் வழக்கமான நடைமுறை. மத்திய அரசு ஒப்பதல் வழங்கிய பிறகு
நீதிபதிகள் நியமனம் தொடர்பான உத்தரவு வெளியிடப்படும். சில சமயங்களில், சில காரணங்கள் அல்லது சிலர் மீதான விசாரணைகள் தேவைப்படும் பட்சத்தில் கொலீஜியம் தனது பரிந்துரையை திரும்பப் பெறும்.
அப்படி ஜனவரி 20 ம் தேதி, நிரந்தர நீதிபதி நியமன பரிந்துரை பட்டியலில் சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் அமைப்பு, மும்பை ஐகோர்ட் நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கனிதிவாலாவின் பெயரையும் சேர்த்திருந்தது. சமீபத்தில் 2 பாலியல் வழக்குகளில் அவர் பிறப்பித்த உத்தரவு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும், சர்ச்சைக்குரியதாகவும் இருந்தது. இதனால் நீதிபதி புஷ்பாவை நிரந்தர நீதிபதியாக நியமனம் செய்யும் பரிந்துரையை கொலீஜியம் திரும்பப் பெற்றிருப்பதாக தகவல் வெளியானது.

அதிர வைத்த உத்தரவுகள்
ஜனவரி 19 ம் தேதி சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில், உடலை நேரடியாக தொடாமல் ஆடை மீது, சிறுமியின் மார்பகங்களை சீண்டுவது பாலியல் வன்கொடுமை ஆகாது. இது போக்சோ சட்டத்தின் கீழ் வராது என்ற உத்தரவை பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், இது ஆபத்தான உத்தரவு என தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், அந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

மீண்டும் தொடர்ந்த சர்ச்சை உத்தரவு
ஜனவரி 28 ம் தேதி மற்றொரு பாலியல் வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி புஷ்பா, சிறுமியின் கைகளை பிடித்து, பேன்ட் ஜிப்பை கழற்ற வைப்பது பாலியல் வன்கொடுமை ஆகாது என உத்தரவிட்டார். 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது நபரின் தண்டனையை எதிர்த்த வழக்கில் இந்த உத்தரவை அவர் பிறப்பித்தார். இதுவும் பலவிதமான கேள்விகளை எழுப்பி, சர்ச்சையாக்கியது.

கடுப்பான கொலீஜியம்
பெண் நீதிபதியின் அடுத்தடுத்த இந்த சர்ச்சை உத்தரவுகளால் அதிருப்தி அடைந்த சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் அமைப்பு, நிரந்தர நீதிபதி பரிந்துரை பட்டியலில் இருந்த நீதிபதி புஷ்பாவின் பெயரை திரும்ப பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு நீதிபதிகள் பெயர், பரிந்துரை பட்டியலில் இருந்து திரும்பப் பெறப்படுவது புதியது இல்லையென கொலீஜியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெயரை திரும்பப் பெற்றது ஏன்
இது தொடர்பாக கொலீஜியம் அளித்துள்ள விளக்கத்தில், இது அவருக்கு எதிராக எடுக்கப்பட்ட தனிப்பட்ட நடவடிக்கை ஏதும் இல்லை. அவர் வழக்கறிஞராக இருந்த போது இது போன்ற வழக்குகளை கையாண்டிருக்க மாட்டார் போல். அதனால் அவருக்கு இது போன்ற வழக்குகளில் பயிற்சி தேவை. அவர் தன்னை நல்ல முறையில் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுநிரந்தரமான முடிவு அல்ல. தேவைப்படும் பட்சத்தில் அவருக்கு எதிரான இந்த நடவடிக்கையில் மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications