சிறுவன் கடத்தல் வழக்கு! பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன்! சுப்ரீம் கோர்ட் அதிரடி
டெல்லி: சிறுவன் கடத்தல் வழக்கில் கே.வி.குப்பம் எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்தியது. அப்போது அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் அவருடைய முன்ஜாமீன் மனு மீது பதிலளிக்க தமிழக காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ். இவர் தேனியை சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது மகளை மீட்க விஜயஸ்ரீயின் தந்தை, பூவை ஜெகன்மூர்த்தியை அணுகியதாக தெரிகிறது.

இந்த நிலையில் தனுஷின் வீட்டிற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற அந்த பெண்ணின் தந்தை, தனது மகளை அனுப்புமாறு கேட்டார். அங்கு அவரது மகள் இல்லை. இதனால் தனுஷின் 17 வயது தம்பியை கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தனுஷின் தாய் லட்சுமி அளித்த புகாரின் பேரில் போலீஸார் தேடி வந்ததால் அந்த சிறுவனை கடத்தியவர்களே, வீட்டு வாசலில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டனர். இந்த கடத்தலுக்கு ஏடிஜிபி ஜெயராமின் கார் பயன்படுத்தப்பட்டதை அடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக பூவை ஜெகன்மூர்த்தியை தேடி வந்தனர். அவர் தலைமறைவாக இருந்து கொண்டு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஜெகன்மூர்த்தி நேரில் வந்து தாக்கல் செய்தால் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றனர்.
இதையடுத்து ஜெகன்மூர்த்தி நேரில் ஆஜரானார். இந்த வழக்கை நீதிபதி ஜெயசந்திரன் விசாரித்த நிலையில், இந்த கடத்தலுக்கு பூவை ஜெகன்மூர்த்திதான் மூளையாக செயல்பட்டார் என காவல் துறை வாதம் செய்தது. மேலும் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என தெரிவித்திருந்தது.
அப்போது நீதிபதி, எம்எல்ஏவை மக்கள் தேர்வு செய்வது இப்படி கடத்தல் செய்வதற்காகத்தானா என வினவினார். இதையடுத்து இந்த வழக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனால் தான் கைது செய்யப்படுவோம் என எண்ணிய பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் பூவை ஜெகன்மூர்த்தி மேல்முறையீடு செய்திருந்தார்.
அந்த மனுவில் அவருடைய வழக்கறிஞர் ராம்சங்கர் கூறியிருப்பதாவது: குற்றம்சாட்டப்பட்ட சக நபர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மனுதாரர் ஜெகன்மூர்த்தி இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளார். மனுதாரர் எம்எல்ஏ என்பதால் குறைதீர் கோரிக்கைகளுடன் அணுகுவது வாடிக்கை.
அவ்வாறுதான் காணாமல் போன சிறுவனின் தாயார் மனுதாரர் பூவை ஜெகன்மூர்த்தியை அணுகிய போது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க ஆலோசனை அளித்திருந்தார். அதை பரிசீலிக்காமல் முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தவறிழைத்துவிட்டது.
வழக்கு விசாரணைக்கு மனுதாரர் தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்து வரும் சூழலில் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என உயர்நீதிமன்றம் தெரிவித்திருப்பது தவறானது. மனுதாரர் கைது செய்யப்பட்டால் அவருடைய தொகுதி மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
அரசியல் பழிவாங்கும் நோக்கில் அவர் கைது செய்யப்படும் நடவடிக்கையை தடுக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும் என அந்த மனுவில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனுவானது நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, கோட்டீஸ்வர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய தடை விதித்து அவருக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் அவருடைய முன்ஜாமீன் மனு மீது பதிலளிக்க தமிழக காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications