பழம் நழுவி பாலில்? ஈபிஎஸ் டீமை குடைந்தெடுத்த சுப்ரீம் கோர்ட்! புது தெம்பில் ஓபிஎஸ்.. என்ன நடக்குது?!
டெல்லி : அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் விரைந்து ஆணை பிறப்பிக்கத் தயாராகி வருவது அதிமுகவின் இரு தரப்பினர் மட்டுமல்லாது, அரசியல் அரங்கிலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த வாரமே வழக்கை முடிக்க நினைப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளதால், ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்பினர் மத்தியில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. நேற்றைய விசாரணையின்போது எடப்பாடி தரப்பிடம் நீதிபதிகள் பல முறை குறுக்கிட்டு கேள்விகளை எழுப்பியது ஓபிஎஸ் தரப்புக்கு நம்பிக்கை கொடுத்துள்ளதாம்.
வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்பதால் இரு தரப்பு வழக்கறிஞர்களும் ஏற்கெனவே வைக்கப்பட்ட வாதங்களை மீண்டும் எடுத்துவைக்கக் கூடாது என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பியது நேற்று உச்ச நீதிமன்ற வளாகத்தையே சூடாக்கியுள்ளது என்றால் மிகையில்லை என்கிறார்கள் வழக்கறிஞர்கள் வட்டாரத்தினர்.
வழக்கில் பிரதானமாக கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி மட்டுமே சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்புமே தாங்கள் வாதங்களை எடுத்து வைக்க நேரம் கேட்ட நிலையில், நீதிபதிகள் கண்டிஷன் போட்டுள்ளதன் மூலம், விரைந்து விசாரித்து ஆணை பிறப்பிக்க சுப்ரீம் கோர்ட் முடிவெடுத்துவிட்டது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

பொதுக்குழு வழக்கு
கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தையும், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கேவியட் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வு முன் விசாரணை நடந்து வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மற்றொரு மனுதாரரான வைரமுத்து சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ரஞ்சித் குமாா், ஹாரேன் ராவல், குரு கிருஷ்ணகுமார் ஆகியோர் வாதாடி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, சி.எஸ்.வைத்தியநாதன், விஜய் நாராயணன், ஆரியமா சுந்தரம், கே.வி.விஸ்வநாதன், அதுல் சிட்லே ஆகியோர் ஆஜராகி வாதிட்டு வருகின்றனர்.

எடுத்ததும் கேட்ட கேள்வி
இந்நிலையில் நேற்று (ஜனவரி 4) மீண்டும் பொதுக்குழு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுகவின் சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளது தானே? அதிமுக பொதுக்குழு வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், வழக்கு காரணமாக கட்சிப் பணிகள் தேங்கிக் கிடக்கிறது என்று தெரிவித்தார். இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ஒரே கோரிக்கையை வலியுறுத்துகின்றனவா? இந்த வழக்கு முடிவடைந்தால் பிரச்சனை முடிந்துவிடுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

நீதிபதிகள் கிடுக்கிப்பிடி
மேலும், யார் யார் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள்? அவர்கள் கட்சியில் என்ன பொறுப்பில் இருக்கிறார்கள்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, அதுகுறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை எடப்பாடி தரப்பினர் நீதிபதிகள் முன் விவரித்தனர். அதனைக் கேட்டு நீதிபதிகள் பதிவு செய்துகொண்டனர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில், "கடந்த ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக இதுவரை எந்தவொரு மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு, "பொதுக்குழுவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்றால், அந்தக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களும் அதன் கீழ்தானே வரும்" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபனை
அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி சார்பில், "கட்சி விதிகளின் படிதான் பொதுக்குழு கூட்டப்பட்டது. ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தால் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும். அதன்படிதான் அன்றைய தினம் பொதுக்குழுவும் நடைபெற்றது." என்று வாதம் வைக்கப்பட்டது. இதற்கு ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆட்சேபனை தெரிவித்தார். அப்போது இடைக்கால பொதுச் செயலாளர் தேர்தல் வைத்துத்தான் தேர்ந்தெடுக்கப்பட்டாரா என்ற நீதிபதிகள் ஈபிஎஸ் தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.

தேர்தல் நடத்தினீர்களா?
"இடைக்கால பொதுச் செயலாளர் கட்சியின் பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்" என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தெரிவித்தனர். இதற்கு ஓபிஎஸ் தரப்பில், அடிப்படை உறுப்பினர்கள் தான் பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டது? தேர்தல் வைக்கப்பட்டதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு "இந்த பதவிகளுக்கு யாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லை. இருவரும் போட்டியின்றி நேரடியாகவே ஒருமித்த கருத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்" என்று ஓபிஎஸ் தரப்பினர் தெரிவித்தனர்.

செல்லாது செல்லாது
மேலும், "பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு, சில வாரங்கள் முன்பு தேர்தல் தொடர்பான ஆவணங்களில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில்தான் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. முந்தைய பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தையும் நிராகரித்து, பொதுக்குழுக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதும், புதிய அவைத் தலைவரைத் தேர்ந்தெடுத்து அடுத்த செயற்குழுவிற்குத் தேதி அறிவித்தது சட்டவிரோதமானது. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் அனுமதி இல்லாமல் கடந்த ஜூலை 11ஆம் தேதி கூட்டப்பட்டது செல்லாது " என்று ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏன் நீக்கினீங்க?
இதையடுத்து, ஜூலை 11ஆம் தேதிக்கு பின்னர்தானே அனைத்தும் மாறியது. அப்படித் தானே? நீங்கள் எதிர்பார்ப்பது என்ன என்று நீதிபதிகள் ஓபிஎஸ் தரப்பிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, "ஜூலை 11ஆம் தேதிக்கு முந்தைய நிலைப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று தொடர வேண்டும். ஜூலை 11ல் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்" என்று ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை வைத்தது. பின்னர், எந்த விளக்கமும் கேட்காமல் ஓபிஎஸை நீக்கியது ஏன் என்று நீதிபதிகள் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞருக்கு கேள்வி எழுப்பினர்.

இதான் எங்களுக்கு வேலையா?
அதற்கு ஈபிஎஸ் தரப்பு, "ஓபிஎஸ், எதிர்க்கட்சியான திமுகவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்" என்று தெரிவித்தது. இதைக் கேட்ட நீதிபதிகள் யார் யாருக்கு ஆதரவளிக்கிறார்கள் என்று நாங்கள் கருத்தில் கொள்ளவில்லை. அதற்கு அவசியமும் இல்லை, அதெல்லாம் அவரவர் விருப்பம், அவர் யாரை ஆதரிக்கிறார் என்று பார்ப்பது நீதிமன்றத்தின் வேலை இல்லை" என்று தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடமே நீதிபதிகள் குறுக்கு கேள்விகளைக் கேட்டதால் ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமான நிலை தென்படுவதைப் போல தோன்றியது.

இந்த வாரமே
இந்நிலையில், ஓபிஎஸ் தரப்பில், வாதங்களை முன்வைக்க 2 மணி நேரம் தேவை என்று கேட்கப்பட்டது. ஈபிஎஸ் தரப்பில் ஒன்றரை மணி நேரம் வாதங்களை முன்வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு நீதிபதிகள் இந்த வாரமே நாங்கள் விசாரணையை முடிக்க விரும்புகிறோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும், அனைத்து தரப்பு வழக்கறிஞர்களும் ஏற்கெனவே வைக்கப்பட்ட வாதங்களை மீண்டும் எடுத்துவைக்கக் கூடாது. நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கக் கூடாது என அறிவுறுத்தினர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் தரப்பில் துளிர்விட்ட நம்பிக்கை
நேற்றைய விசாரணையின்போது, வழக்கு குறித்து மேலோட்டமான விஷயங்களே விவாதிக்கப்பட்டன. எனினும், எடப்பாடி பழனிசாமி தரப்பு முன்வைத்த வாதங்களின்போது பல முறை நீதிபதிகள் குறுக்கிட்டு கேள்விகளை எழுப்பினர். இது ஓபிஎஸ் தரப்புக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளதாம். மேலும், உங்களின் ப்ரேயர் என்ன என ஓபிஎஸ் தரப்பிடம் நீதிபதிகள் தெளிவாகக் கேட்டுக்கொண்டனர். நேற்றைய விசாரணையில், ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமான விஷயங்களே நடந்திருப்பதாகச் சொல்கின்றனர் ஓபிஎஸ் தரப்பினர். இன்றும் விசாரணை தீவிரமடையும் என்பதால், இன்று வழக்கின் திசை மாறுமா, யார் கை ஓங்கும் என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications