திருப்பதி லட்டு சர்ச்சை: "அரசியல் கூடாது!" சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: திருப்பதி லட்டு விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதற்கிடையே இது தொடர்பான வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், இது பல கோடி பக்தர்கள் தொடர்பான விஷயம் என்பதால் இதில் அரசியல் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
நமது அண்டை மாநிலமான திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகிறார்கள். இங்கு வரும் பக்தர்களுக்குப் பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது.

இந்த லட்டு செய்யப் பயன்படுத்தப்படும் நெய்யில் மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய் கலந்திருப்பதாகக் கடந்த மாதம் சர்ச்சை வெடித்தது. இது தேசியளவில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்: இந்த விவகாரத்தை விசாரிக்க ஏற்கனவே ஆந்திர அரசு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்திருந்தது. இதற்கிடையே இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது திருப்பதி லட்டு விவகாரத்தைச் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்கத் தடையில்லை என்று உத்தரவிட்டனர். மேலும், சிபிஐ, போலீஸ், உணவு பாதுகாப்புத் துறை இணைந்து இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், இது கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை தொடர்புடைய விஷயம் என்பதால் இதில் அரசியல் டிராமா வேண்டாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அரசியலுக்குப் பயன்படுத்தக் கூடாது: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மேலும் கூறுகையில், "இந்த குற்றச்சாட்டுகள் உலகம் முழுவதும் உள்ள பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தலாம். எனவே, இந்த விவகாரத்தில் அரசியல் கூடாது. இதில் எழுந்த குற்றச்சாட்டுகள் மற்றும் அதற்குப் பதிலாகச் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து நாங்கள் எதுவும் செல்லவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறோம். நீதிமன்றத்தை அரசியலுக்குப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்" என்றனர்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்துச் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்கும். இந்த புலனாய்வுக் குழுவில் இரண்டு சிபிஐ அதிகாரிகள், இரண்டு மாநில போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் மூத்த அதிகாரி இருப்பார் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மேலும் கூறுகையில், "இந்த விவகாரத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தான் உச்சபட்ச அமைப்பு.. எனவே, அந்த அமைப்பில் இருந்து அதிகாரி ஒருவர் இருந்தால் நம்பிக்கை இருக்கும்" என்றனர்.
மத்திய அரசு வாதம்: முன்னதாக மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் ஏழுமலையான் கோயிலுக்கு வருகிறார்கள். இது உணவு பாதுகாப்பு தொடர்பானது என்பதால் இதில் தவறுகளை ஏற்க முடியாது. இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க மாநில அரசு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது. அதில் எந்தத் தவறும் இல்லை. வேண்டும் என்றால் இதை ஒரு மத்திய அரசு அதிகாரி மேற்பார்வையிடலாம்" என்று வாதத்தை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது. அதை ஏற்றே சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தனர்.












Click it and Unblock the Notifications