சிபிஐ விசாரணை கோரிய தரப்பில்.. ஏகப்பட்ட குளறுபடிகள்! உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை!
டெல்லி: கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மனுவை தாக்கல் செய்தவர்கள் தரப்பில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்தன. ஒருவேளை போலியான மனுவை தாக்கல் செய்து உத்தரவு பெற்றிருந்தால், அது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவரை பார்க்க ரசிகர்கள் அதிக அளவில் திரண்டு இருந்தனர். இந்த கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

சம்பவம் தொடர்பாக தமிழக அரசு இரண்டு விசாரணை ஆணையத்தை அமைத்தது. முதல் ஆணையம் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலும், இரண்டாவதாக புலன் விசாரணை குழு, வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் அமைக்கப்பட்டது. இதற்கு தமிழக வெற்றிக் கழகம் தொடக்கம் முதல் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தது. மட்டுமல்லாது பாதிக்கப்பட்டவர்கள் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தனர்.
உயிரிழந்த 41 பேரில், 9 வயது சிறுவன் ரித்விக்கும் ஒருவர். அவரது தந்தை பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், ரித்விக் 6 மாதமாக இருக்கும்போதே, தந்தை பன்னீர்செல்வம் குடும்பத்தையும், குழந்தையையும் கைவிட்டுவிட்டு ஓடிவிட்டார் என்று தாய் குற்றம்சாட்டியிருந்தார். மட்டுமல்லாது சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறியிருந்தார்.
இது தொடர்பாக 'டிரைப்ஸ் தமிழ்' எனும் யூடியூப் சேனல் புலன் விசாரணை மேற்கொண்டு, தாயின் வாக்குமூலத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருந்தது. அதில், தான் தனி பெண்ணாக இருந்து குழந்தையை வளர்த்ததாகவும், பள்ளியில்கூட தனி பெற்றோர் என்கிற சான்றிதழ் பெற்றிருப்பதாகவும் கூறியிருந்தார். கடந்த 8.5 ஆண்டுகளாக வராத தந்தை, குழந்தையின் உயிரிழப்புக்கு மட்டும் வந்தது ஏன்? குழந்தையின் மரணத்திற்காக கொடுக்கப்பட்ட நிவாரண தொகையை வாங்கவே வந்திருக்கிறார் என்று குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், இன்று உச்சநீதிமன்ற விசாரணையில் தாய் ஆஜராகியிருந்தார். ஆஜராகி, தாங்கள் எந்த வழக்கையும் தாக்கல் செய்யவில்லை என்று கூறியிருந்தனர்.
அப்படியெனில் பன்னீர்செல்வத்தை இயக்குவது யார்? என்றும் கேள்வி எழுந்திருந்தது. நேரடியாக சிபிஐ விசாரணையை கேட்காத தவெக, பாதிக்கப்பட்டவர்கள் மூலம் அரசியல் செய்கிறது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து பேசியிருந்த தமிழ்நாடு தரப்பில் ஆஜராகியிருந்த வில்சன்,
"இரண்டு பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி, தங்களது அனுமதியில்லாமல் தங்கள் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உத்தரவு பெறப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கின்றனர். இது தொடர்பாக வழக்கை தாக்கல் செய்ய எங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. போலியான நபர்களை கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, தீர்ப்பு பெறப்பட்டிருக்கிறது என்று தெரிய வந்தால், நீதிமன்றம் அந்த தீர்ப்பை ரத்து செய்துவிடும்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications