ஞானவாபி மசூதியில் இந்துக்கள் பூஜை! இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.. என்ன காரணம்!
டெல்லி: உத்தரப் பிரதேச காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் இந்து அமைப்புகள் பூஜை செய்ய இடை கால தடைவிதிக்க வேண்டும் என்று மசூதி கமிட்டி உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தது. ஆனால், இதற்கு நீதிமன்றம் தற்போது தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.
வாரணாசியில் சுமார் 325 ஆண்டுகளுக்கு முன்னர் முகலாய பேரரசர் அவுரங்கசீப் ஆணையின்படி இந்த மசூதி கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இந்த மசூதி குறித்து சில சர்ச்சைகள் நிலவி வந்தன. அதாவது, இது பழைய காசி விஸ்வநாதர் கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டதாக இந்துத்துவ அமைப்பினர் குற்றம்சாட்டினர். இதனையடுத்து இந்த மசூதியில் நடத்திய ஆய்வில் லிங்கம் போன்ற வடிவம் ஒன்று கிடைத்துள்ளது. இதனையடுத்து, இந்த மசூதி இந்து கோயிலை இடித்துவிட்டுதான் கட்டப்பட்டது என இந்துத்துவ அமைப்பினர் பிரசாரம் நடத்த தொடங்கினர்.

ஆனால், மசூதிக்கு உள்ளே வருவதற்கு முன்னர் கை, கால்களை கழுவ ஒரு நீரூற்று இருந்தது என்றும், அதைத்தான் இவர்கள் லிங்கம் போன்ற வடிவம் என்று கூறிகிறார்கள் என மசூதி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். ஆனால் இந்துத்துவ அமைப்பினர் இதனை ஏற்கவில்லை. எனவே மாவட்ட நீதிமன்றத்தை அணுகி இந்த லிங்கம் வடிவத்தின் வயதை கண்டறிய கார்பன் டேட்டிங் செய்ய வேண்டும் என்று இந்துத்துவ ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த மசூதியின் அடித்தளத்தில் இந்து அமைப்புகள் பூஜை நடத்த வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த பிப்.1ம் தேதி பூஜை நடத்த அனுமதியும் வழங்கியது. இதனையடுத்து பூஜைகள் நடத்தப்பட்டு அதற்கான புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவின.
ஆனால், இதனை எதிர்த்து மசூதி கமிட்டி உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தது. இந்த மனு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மசூதி கமிட்டி சார்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் ஹுசைபா அஹ்மதி, "அலகாபாத் உயர்நீதிமன்றம் தனது உத்தரவை அமல்படுத்த ஒரு வார காலம் அவகாசம் வழங்கியிருந்தது. ஆனால், மாவட்ட நிர்வாகம் அவசர அவசரமாக இந்து அமைப்புகளின் வழிப்பாட்டுக்கு உதவியது. எனவே இந்த வழிபாட்டிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று" என்று வலியுறுத்தினார்.
ஆனால், நீதிமன்றம் இதற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. குறிப்பாக, பூஜைக்கு செல்பவர்கள் தெற்கிலிருந்தும், மசூதிக்கு வருபவர்கள் வடக்கிலிருந்தும் வருகின்றனர். எனவே, இதில் எந்த பிரச்னையும் ஏற்படாது என்று சந்திரசூட் விளக்கமளித்தார்.












Click it and Unblock the Notifications