370 நீக்கம்.. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழக்கு.. தீர்ப்பு எப்போது? ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசிலமைப்பின் 370 வது பிரிவை மத்திய பாஜக அரசு நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்து முடித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்தது. மேலும் அந்த மாநிலத்துக்கு அரசியலமைப்பு சட்டத்தில் 370 வது பிரிவின் படி சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் கடந்த 2019 ல் மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை ரத்து செய்தது.

மேலும் மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் என்பது லடாக், காஷ்மீர் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து அன்று முதல் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெறவில்லை. துணை நிலை ஆளுநர் மூலம் அங்கு நிர்வாகம் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தான் அரசியலமைப்பு சட்டத்தின் 370வது பிரிவு நீக்கத்துக்கு தொடக்கம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டப்பிரிவு நீக்கம் என்பது ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமையை பறிப்பது போன்றது என அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். அதேபோல் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதற்கிடையே தான் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 நீக்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவை அனைத்தும் ஒரே வழக்காக எடுத்து கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கை தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷான் கவுல், சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய், சூர்யா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வந்தது.
கடந்த 16 நாட்களாக தொடர்ந்து இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பு மற்றும் மத்திய அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. மத்திய அரசு சார்பில் சோலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதம் வைத்து வந்தார். இதையடுத்து மனுதாரர்களில் ஒருவரான தேசிய மாநாட்டு கட்சியின் எம்பி முகமது அக்பர் சார்பில் இன்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இதன்மூலம் அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications