உ.பி. மதரஸா சட்டம் செல்லாது என்ற அலகாபாத் ஹைகோர்ட் தீர்ப்புக்கு தடை- உச்சநீதிமன்றம் அதிரடி!
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் மதரஸா சட்டம் 2004 செல்லாது என்ற அம்மாநில அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கும் மதரஸா கல்வி நிறுவனங்கள் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அன்சுமன் சிங் ரத்தோர் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் விவேக் சவுத்ரி, சுபாஷ் வித்யார்த்தி விசாரித்தனர்.

மதரஸாக்களுக்கு எதிரான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் விவேக் சவுத்ரி, சுபாஷ் வித்யார்த்தி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அதிரடியான தீர்ப்பு வழங்கியது பெரும் சர்ச்சையானது. அத்தீர்ப்பில், உத்தரப்பிரதேச மாநில அரசின் மதரஸா கல்விச் சட்டம் 2004 என்பது அரசியல் சாசனத்துக்தே எதிரானது. இந்தச் சட்டம் நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானது. ஆகையால் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதரஸாக்களில் பயிலும் மாணவர்களை மாநில அரசு வேறு அரசு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் 25,000 மதரஸாக்கள் செயல்படுகின்றன. இவற்றில் 16,000 மதரஸாக்கள் அங்கீகாரம் பெற்றவை. இந்த மதரஸாக்களில் சுமார் 17 லட்சம் இஸ்லாமிய மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இவற்றில் சுமார் 10,000 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பால் 17 லட்சம் மாணவர்கள் மற்றும் 10,000 ஆசிரியர்களின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியானது. முன்னதாக மதரஸாக்களுக்கான நிதி உதவி உள்ளிட்டவைகளில் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசும் கடும் கெடுபிடிகாட்டி சிறப்பு புலனாய்வுக்குழுக்களை அமைத்திருந்தது.
இந்த நிலையில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் பெஞ்ச் இன்று விசாரித்தது. அப்போது, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மதரஸாக்களை ஒழுங்குபடுத்தவே வழக்கு தொடரப்பட்டது. மதரஸாக்கள், மதசார்பற்ற தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றெல்லாம் சொல்லப்படவில்லை. மதரஸாக்களை ஒழுங்குபடுத்த உத்தரவு பிறப்பிக்கலாம். அதற்காக மதரஸாக்கள் சட்டத்தையே ரத்து செய்வது; செல்லாது என தீர்ப்பளிக்க முடியாது. ஆகையால் மதரஸா சட்டம் செல்லாது; மதரஸா மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்றனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.












Click it and Unblock the Notifications