சண்டிகர் மேயர் தேர்தல்-பாஜக தேர்தல் அதிகாரிக்கு கடும் கண்டனம்- நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
டெல்லி: சண்டிகர் மேயர் தேர்தல் நடத்திய பாஜகவை சேர்ந்த தேர்தல் அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும் சண்டிகர் மேயர் தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பஞ்சாப், ஹரியானா ஆகிய இரு மாநிலங்களின் தலைநகராக சண்டிகர் இருக்கிறது. இந்த சண்டிகரில் கடந்த மாதம் மேயர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி- காங்கிரஸ் இணைந்து இந்தியா கூட்டணி வேட்பாளரை நிறுத்தும் என அறிவிக்கப்பட்டது.

இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மியின் குல்தீப் குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக சார்பில் மனோஜ் சோன்கர் களமிறக்கப்பட்டார். மேயர் தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்களித்தனர்.
மேயர் தேர்தல்: சண்டிகரில் "இந்தியா" கூட்டணிக்கு அதிக கவுன்சிலர்கள் இருந்த நிலையில், அவரே வெல்ல வாய்ப்பு அதிகம் என கருதப்பட்டது. இருப்பினும், தேர்தல் முடிவுகளில் அனைவருக்குமே அதிர்ச்சி தான்.. இந்த மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் 4 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. பாஜக வேட்பாளருக்கு 16 வாக்குகள் கிடைத்த நிலையில், இந்தியா வேட்பாளருக்கு 20 வாக்குகள் கிடைத்த போதிலும் அதில் 8 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன.
சர்ச்சையை கிளப்பிய சண்டிகர் மேயர் தேர்தல்! திடீர் ட்விஸ்ட்! பாஜகவின் மனோஜ் சோன்கர் ராஜினாமா! பின்னணி
இருப்பினும், இதில் முறைகேடு நடந்ததாக ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டின. இந்தச் சூழலில் தேர்தல் நடத்தும் அதிகாரி அனில் மசிஹ் வாக்குச்சீட்டில் மாற்றம் செய்வது போன்ற வீடியோவும் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியது. பொதுவாகச் செல்லாத வாக்குகள் விழுந்தால் அதை கவுன்சிலர்களுக்கு காட்டலாம். ஆனால், கவுன்சிலர்கள் அந்த வாக்குச்சீட்டைப் பார்க்க வேண்டும் எனக் கூறிய போதிலும், தேர்தல் நடத்தும் அதிகாரி அதைக் காட்ட மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
உச்ச நீதிமன்றம்: இந்தச் சூழலில் தான் சண்டிகர் மேயர் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த பிப். 5ஆம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் சில காட்டமான கருத்துகளைத் தெரிவித்தார். தேர்தல் நடத்தும் அதிகாரியை மிகக் கடுமையாக விமர்சித்த தலைமை நீதிபதி, தேர்தல் அதிகாரி நடத்தை ஜனநாயக படுகொலைக்குச் சமமானது எனச் சாடினார்.
கேமராவைப் பார்த்த பிறகும் வாக்குச் சீட்டில் ஏதோ செய்வது வீடியோவில் தெளிவாகத் தெரிவதாகக் கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் செல்லாத வாக்குகளாகவே இருந்தாலும் அதில் எப்படி மாற்றங்களைச் செய்யலாம் என்றும் கேள்வி எழுப்பினர். மேலும், சண்டிகர் கவன்சிலர்கள் கூட்டத்தை நடத்தவும் தடை விதித்தனர்.
இன்று விசாரணை: தேர்தல் நடத்தும் அதிகாரியின் நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது என்றும் காட்டமான கருத்துகளைக் கூறினர். இதற்கிடையே இன்று சண்டிகர் மாநகராட்சி மேயர் பதவியை மனோஜ் சோன்கரும் ராஜினாமா செய்திருந்தார்.
இந்தச் சூழலில் தான் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது சண்டிகர் மேயர் தேர்தல் நடத்திய தேர்தல் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். அவருக்கு நேரடியாக உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் தேர்தல் நடத்திய அந்த அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சண்டிகர் மேயர் தேர்தலில் பதிவான வாக்குகளுடன் உயர்நீதிமன்ற பதிவாளர் நேரில் ஆஜராகவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எந்த ஒரு கட்சியையும் சேராத ஒருவரை வைத்து சண்டிகர் மேயர் தேர்தல் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications