பொறுப்பு டிஜிபி.. வெங்கட்ராமன் நியமனத்திற்கு எதிராக வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
டெல்லி : ஜி. வெங்கட்ராமனை தமிழக சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக நியமித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எந்த ஒரு மாநிலமும் காவல்துறை தலைமை இயக்குநர் பதவியில் எந்த ஒரு நபரையும் பொறுப்பு அடிப்படையில் நியமிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்துள்ள நிலையில், அதனை மீறி நியமித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரும் வழக்கை இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
2025 ஆகஸ்ட் 31 அன்று, தமிழக அரசு மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஜி. வெங்கட்ராமனை (G தமிழகத்தின் பொறுப்பு காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) மற்றும் காவல் படைத் தலைவர் (Head of Police Force) பதவியில் நியமித்துள்ளது. டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதை அடுத்து வெங்கட்ராமனை பொறுப்பு டிஜிபியாக நியமித்தது. ஆனால் சீனியாரிட்டியில் அவரை விட 8 பேர் உள்ள நிலையில், வெங்கட்ராமன் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், பாஜக முன்னாள் மாநில தலைவருமான அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இதேபோல் பலரும் பொறுப்பு டிஜிபி நியமனத்தை விமர்சித்தார்கள். இது ஒருபுறம் எனில் வெங்கட்ராமன் பதவியேற்பின் போது, மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் கலந்து கொள்ளவே இல்லை.. இதுவும் சர்ச்சையானது.

இந்நிலையில் இந்த நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி திபேன் இந்த அவமதிப்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்தமனுவில். 2018 ஆம் ஆண்டு பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்தத் தீர்ப்பின்படி, ஒரு மாநிலத்தில் டிஜிபி பதவி காலியாகும் போது, தற்போதைய டிஜிபி ஓய்வு பெறுவதற்கு குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்பே, மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு (UPSC) ஒரு முன்மொழிவை அனுப்ப வேண்டியது அவசியம். "ஆனால், தமிழ்நாடு அரசு இந்த முன்மொழிவை மூன்று மாதங்களுக்கு முன்பே யுபிஎஸ்சிக்கு அனுப்பவில்லை.
எந்த ஒரு மாநிலமும் காவல்துறை தலைமை இயக்குநர் பதவியில் எந்த ஒரு நபரையும் பொறுப்பு அடிப்படையில் நியமிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டுள்ளது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு முரணாக, தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் 31, 2025 தேதியிட்ட போலீஸ் குறிப்பு எண்: SC/19/2025 மூலம், சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதால் ஜி. வெங்கடராமன் ஐபிஎஸ்-ஐ காவல்துறை தலைமை இயக்குநர்/காவல் படைத் தலைவரின் பொறுப்பு அதிகாரியாக நியமித்துள்ளது. இது நீதிமன்ற உத்தரவை மீறிய ஒரு தெளிவான மற்றும் வேண்டுமென்றே செய்யப்பட்ட செயல்.
உயர் நீதிமன்றம் தனது மனுவை முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டதாக கூறி தள்ளுபடி செய்துவிட்டது. அதேநேரம் டிஜிபி பதவிக்கான நியமனத்தில் சுதந்திரத்தையும், வெளிப்படைத்தன்மையையும் நிலைநிறுத்த, உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசு, மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் உத்தரவுகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்" என்று உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. எனவே பொறுப்பு அதிகாரியாக நியமித்ததற்காக தமிழ்நாடு அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹென்றி திபேன் கூறியிருந்தார்.
இந்நிலையில் டிஜிபி பதவிக்கான நியமன செயல்முறை நடந்து கொண்டிருப்பதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்திருந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தமிழ்நாடு அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரும் மனுவை இன்று விசாரிக்க உள்ளது.












Click it and Unblock the Notifications