தசரா விடுமுறைக்கு பின் காஷ்மீர் 370-வது பிரிவு ரத்துக்கு எதிரான வழக்கு விசாரணை- உச்சநீதிமன்றம்
டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு விசாரணை தசாரா விடுமுறைக்குப் பின்னர் நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370-வது சட்டப்பிரிவு மத்திய பாஜக அரசால் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி ரத்து செய்யப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர் என்ற மாநிலமே ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக கூறு போடப்பட்டன.

மேலும் ஜம்மு காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளாக அரசியல் நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மத்திய பாஜக அரசு தேர்தல் நடத்துவதில் தீவிரமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்த 370-வது பிரிவு நீக்கம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 20-க்கும் மேற்பட்ட பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கை அரசியல் சாசன பெஞ்ச் அமர்வு விசாரித்து வருகிறது.
இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என தலைமை நீதிபதி யுயு லலித் பெஞ்ச் முன்னிலையில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்தோ சந்திர சென் சுட்டிக்காட்டினார். அப்போது, இவ்வழக்கு தசாரா விடுமுறைக்கு பின்னர் விசாரிக்கப்படும் என்றார் தலைமை நீதிபதி யுயு லலித்.
உச்சநீதிமன்ற தசாரா விடுமுறைகள் அக்டோபர் 3-ந் தேதி முதல் அக்டோபர் 10-ந் தேதி வரை. அதன்பின்னரே இவ்வழக்கின் விசாரணை நடைபெறும்.












Click it and Unblock the Notifications