அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்! செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு வழக்கு ஜூலை 26ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
டெல்லி: அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது செல்லும் என ஐகோர்ட் தீர்ப்பளித்த நிலையில், இதை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கு விசாரணையை 26ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தர பணம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் சட்ட விரோத பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் 13ஆம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.

சிறையில் செந்தில் பாலாஜி: நெஞ்சுவலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயத்தில் 3 அடைப்பு இருந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சில வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி, அவரது மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால், வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.
ஐகோர்ட் தீர்ப்பு: இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின், நீதிபதி கார்த்திகேயன் அண்மையில் தீர்ப்பளித்தார். மூன்றாவது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், செந்தில் பாலாஜியின் கைது செல்லும் என்றும், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என்றும் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்கும்படி, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று கோரிக்கை விடுத்தார்.
சுப்ரீம் கோர்ட் விசாரணை: அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த வழக்கில் தவறான தகவல்கள் கூறப்பட்டுள்ளன. மூன்றாவது நீதிபதியின் உத்தரவு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் இந்த வழக்கு விசாரணையை டிவிஷன் பெஞ்ச் தொடர்ந்து விசாரிக்க இன்னும் உத்தரவிடவில்லை என வாதிட்டார்.
இதைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பின் மேல்முறையீட்டு மனுக்களை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, சுந்தரேஷ் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்: அப்போது கைது நடவடிக்கைக்கு எதிராக செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது அமலாக்கத்துறை பதில் அளிக்க நோட்டீஸ் அளித்து, வழக்கு விசாரணையை ஜூலை 26ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு.












Click it and Unblock the Notifications