"நாங்கள் நேரடியாக தலையிட வேண்டி இருக்கும்.." பீகார் SIR நடைமுறை.. சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்
டெல்லி: பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் நிலையில், அங்கு இப்போது சார் எனப்படும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடந்து வருகிறது. இந்த சார் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே வாக்காளர் பட்டியலில் இருந்து பெரிய அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டால் உடனே சுப்ரீம் கோர்ட் அதில் தலையிடும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
பீகாரில் இப்போது நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடக்கும் நிலையில், அதற்கு முன்பு சார் எனப்படும் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், ஆளும் தரப்புக்கு சாதகமாகவே தேர்தல் ஆணையம் இதைச் செய்வதாக எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வாக்குரிமை பறிபோகும்
இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு உள்ளிட்ட மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட இருக்கும் நிலையில், அதில் இருந்து அதிகப்படியான மக்கள் நீக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார். இதனால் மக்களின் அடிப்படை வாக்குரிமை பறிபோகும் அபாயம் உள்ளதாகவும் அவர் வாதிட்டார்.
ஏடிஆர் சார்பில் சார்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன், சுமார் 65 லட்சம் பேர் இறந்துவிட்டார்கள் அல்லது நிரந்தரமாக இடம் பெயர்ந்து விட்டார்கள் என்று தேர்தல் ஆணையம் செய்தி வெளியிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். தேர்தல் ஆணையத்திடம் மட்டுமே இந்த 65 லட்சம் பேர் பற்றிய தகவல்கள் உள்ளன என்றும், அவர்களின் பெயர்கள் வரைவுப் பட்டியலில் சேர்க்கப்பட்டால் மனுதாரர்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் கபில் சிபல் தெரிவித்தார்.
சுப்ரீம் கோர்ட் தலையிடும்
இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், "உங்கள் வாதத்தின்படி, சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெறாமல் போகலாம் என்று நீங்கள் கருதுகிறீர்கள். 2025ஆம் ஆண்டிற்கான திருத்தத்தைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. நாங்கள் இந்த செயல்முறையை மேற்பார்வையிடுகிறோம். பெரிய அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டால், நாங்கள் உடனடியாகத் தலையிடுவோம். உதாரணமாக உயிருடன் இருக்கும் 15 பேர் நீக்கப்பட்டதாக நீங்கள் கூறினால், நாங்கள் அது குறித்து விசாரணை செய்வோம்" என்று தெரிவித்தனர்.
30 நாள் டைம் இருக்கு
தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி, நீக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஆட்சேபனைகள் ஆய்வு செய்த பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும் என்று வாதிட்டார். மேலும் அவர், "ஆட்சேபனை தெரிவிக்க மக்களுக்கு உரிமை உண்டு. ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விடுபட்டவர்களின் பெயர்களைச் சேர்க்க மனுதாரர்கள் உதவ வேண்டும்" என்றார். மேலும் இந்த பணிகள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றம் கருத்து
வரைவுப் பட்டியலில் சில பெயர்கள் விடுபட்டிருந்தால், அதை உடனடியாக நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரலாம் என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இந்த மனுக்களை ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறிய உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து மனு தாக்கல் செய்தவர்கள் ஆகஸ்ட் 8ஆம் தேதிக்குள் தங்கள் எழுத்துப்பூர்வ வாதங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications