4 மாத சிறை தண்டனையை அனுபவிக்காத விஜய் மல்லையா - அடுத்தது என்ன? உச்சநீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 4 மாத சிறை தண்டனையை அனுபவிக்காத, வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையா தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவை பிறப்பிக்க உள்ளது.
நாட்டின் வங்கிகளில் ரூ9,000 கோடி கடன் பெற்றவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. ஆனால் ரூ9,000 கோடி கடனை திருப்பி செலுத்தாமல் இந்தியாவை விட்டே 2016-ம் ஆண்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிப் போய்விட்டார் விஜய் மல்லையா.

வங்கி கடன்களை மோசடி செய்துவிட்டு தப்பி ஓடிய விஜய் மல்லையா நிதி மோசடியாளர் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது இங்கிலாந்தில் பதுங்கி இருக்கும் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு பல்வேறு கட்ட நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் விஜய் மல்லையா, அங்கிருந்தபடியே தமது வாரிசுதாரர்களுக்கு ரூ300 கோடி பணத்தை அனுப்பி இருக்கிறார். இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது. இதனால் விஜய் மல்லையா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. 2017-ம் ஆண்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி என உச்சநீதிமன்றம் அறிவித்தது. இதனை எதிர்த்து விஜய் மல்லையா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் 2020-ல் டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், வாரிசுதாரர்களுக்கு அனுப்பிய ரூ300 கோடியை 8% வட்டியுடன் திருப்பி செலுத்தவும் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து விஜய் மல்லையா தரப்பில் எந்த பதிலும் வரவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்காமல் இருந்த விஜய் மல்லையாவுக்கு 4 மாதம் சிறை தண்டனையும் ரூ2,000 அபராதத்தையும் 4 வாரங்களுக்குள் செலுத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த அபராதத்தொகையை விஜய் மல்லையா செலுத்தாமல் போனால் மேலும் 2 மாதம் கூடுதலாக சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு குறித்து விஜய் மல்லையா தரப்பில் எந்த பதிலும் வரவில்லை என மீண்டும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகமும் உச்சநீதிமன்றத்தில் அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கைகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையிலான பெஞ்ச் இன்று ஆராய்ந்து முக்கிய உத்தரவை பிறப்பிக்க உள்ளது.












Click it and Unblock the Notifications