கொலீஜியம் பரிந்துரைகள் தாமதம்.. கடுகடுத்த சுப்ரீம் கோர்ட்.. இன்று வழக்கு மீண்டும் விசாரணை!
டெல்லி: நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கொலீஜியம் பரிந்துரைகளை மத்திய அரசு காலதாமதம் செய்வதாகத் தொடரப்பட்ட மனுக்களை இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது.
நமது நாட்டில் நீதிபதிகள் நியமனம் என்பது கொலீஜியம் முறையைப் பின்பற்றியே நடந்து வருகிறது. இந்த கொலீஜியம் அமைப்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட 5 நீதிபதிகள் இருப்பார்கள். அவர்கள் அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் மத்திய அரசு நீதிபதிகளை நியமிக்கும்.

இருப்பினும், இந்த விவகாரத்தில் கடந்த சில காலமாகவே சர்ச்சை நிலவி வருகிறது. அதாவது கொலீஜியம் அளிக்கும் பரிந்துரைகள் அடிப்படையில் நீதிபதிகளை நியமனம் செய்வதில் மத்திய அரசு தாமதம் காட்டுவதாகப் புகார்கள் உள்ளன.
இந்த விவாகரத்தில் உச்ச நீதிமன்றத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கொலீஜியம் பரிந்துரைகளை மத்திய அரசு காலதாமதம் செய்வதாகத் தொடரப்பட்ட உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
முன்னதாக இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டதற்கு வருத்தம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட், இதில் சில முக்கிய கருத்துகளையும் தெரிவித்தது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றம், "கடந்த வாரம் வரை 80 பரிந்துரைகள் நிலுவையில் இருந்தன, 10 பரிந்துரைகளில் மட்டுமே அறிவிப்பு வந்துள்ளன. இப்போது 70 பரிந்துரைகள் நிலுவையில் உள்ளன. அதில் 26 நீதிபதிகள் இடமாற்றம் தொடர்பானவை.. ஒன்பது கொலீஜியத்திற்குத் திரும்பப் பெறப்படாமல் நிலுவையில் உள்ளன. ஒரு பரிந்துரை முக்கியமான ஐகோர்ட் ஒன்றில் தலைமை நீதிபதி நியமிப்பது தொடர்பானது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இவை அனைத்தும் நிலுவையில் உள்ளன" என்றார்.
இதையடுத்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனம் தொடர்பாக நிலுவையில் உள்ள பரிந்துரைகள் குறித்த பதில் தர ஒரு வாரக் கால அவகாசம் கேட்டார்.
ஒரு வாரம் கால அவகாசம் தந்த சுப்ரீம் கோர்ட், "அரசு தரப்பு வழக்கறிஞர் மிகக் குறுகிய கால அவகாசம் கேட்டதால் நான் அமைதியாக இருக்கிறேன். ஆனால், அடுத்த முறை நான் அமைதியாக இருக்க மாட்டேன். இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உங்கள் பதவியைப் பயன்படுத்துங்கள்" என்றார்.
இதற்கிடையே நீதிபதிகள் நியமனம் தொடர்பான மனுக்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை இன்று விசாரிக்கிறது.












Click it and Unblock the Notifications