விடுதலையாகும் கெஜ்ரிவால்.. டெல்லி மதுபான வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி அதிரடி உத்தரவு..
டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் சிபிஐ வழக்கிலும் இன்று உச்சநீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உள்ளது. இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வர உள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இந்நிலையில் தான் டெல்லியில் கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதில் ஊழல், முறைகேடு புகார் எழுந்த நிலையில் அது கைவிடப்பட்டது.

இருப்பினும் மதுபான கொள்கை முறைகேடு பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்பட பலரது வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். அதேபோல் ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டார். தெலுங்கானா எம்எல்சி கவிதா (தெலுங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் மகள்) அதன்பிறகு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டார். 4 பேரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஏற்கனவே இவர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்த நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் தனியே அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது. இதில் தற்போது சஞ்சய் சிங் எம்பி, மணிஷ் சிசோடியா ஜாமீனில் வெளியே வந்துள்ளார். கவிதாவுக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது. இதனால் 3 பேரும் டெல்லி திகார் சிறையில் இருந்து வெளியே வந்துவிட்டனர்.
ஆனால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் கொடுத்தது. அதன்பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் சிறைக்கு சென்றார். முதலில் அரவிந்த் கெஜ்ரிவாலைது அமலாக்கத்துறை மட்டுமே கைது செய்தது. இந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் சிபிஐ அதிரடியாக அவரை கைது செய்தது.
இந்நிலையில் தான் அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐயின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவர் 2 மனுக்களை செய்தார். ஒன்று சிபிஐ வழக்கில் இருந்து ஜாமீன் கேட்டு இருந்தார். இன்னொரு வழக்கில் சிபிஐ கைது நடவடிக்கையை எதிர்த்த மனுவாகும். இந்த மனுக்களின் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் சிபிஐ நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் செப்டம்பர் 5ம் தேதி இருதரப்பு வாதங்களும் முடிவடைந்தன. இதையடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் தான் உச்சநீதிமன்றத்தில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. உள்ளது. நீதிபதி சூர்யா காந்தி, உஜ்ஜல் புயான் அமர்வு தீர்ப்பு வழங்கினர். இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்கும் பட்சத்தில் அவர் சிறையில் இருந்து வெளியே வருவார் என்பதால் இன்றைய நாள் ஆம்ஆத்மி கட்சிக்கு மிகவும் முக்கியமான நாளாக கருதப்பட்டது.
இந்நிலையில் தான் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தரவிடப்பட்டுள்ளது.இதுதொடர்பாக நீதிபதிகள், ‛‛3 சட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளோம். கைது சட்டப்பூர்வமானதா? ஜாமீன் வழங்க முடியுமா? குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால் வழக்கை விசாரணை நீதிமன்றத்துக்கு அனுப்புவதா? என்பதற்கு பதிலளித்து உள்ளோம். அதன்படி சிறையில் இருக்கும் ஒருவரை மீண்டும் கைது செய்ய எந்த தடையும் இல்லை. அந்த வகையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது என்பது சட்டப்பூர்வமானது தான். அதில் எந்த தவறும் இல்லை.
அதேவேளையில் நீண்டகாலமாக ஒருவரை சிறையில் வைப்பது என்பது அவரது சுதந்திரத்தை பறிக்கும் செயல் எனக்கூறி உச்சநீதிமன்றம் இந்த ஜாமீனை வழங்கி உள்ளது. மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தொடர்பாக எந்தவித கருத்தையும் தெரிவிக்ககூடாது. சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வழக்கு வழக்கிற்கு ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்து ஜாமீனை உறுதி செய்தனர்.
டெல்லி மதுபான கொள்ளை ஊழல் வழக்கில் ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்த நிலையில் தற்போது சிபிஐ வழக்கிலும் ஜாமீன் கிடைத்துள்ளது. இதனால் அவர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் ஏற்கனவே மணிஷ் சிசோடியா ஜாமீனில் வெளியே உள்ள நிலையில் கெஜ்ரிவாலும் சிறையில் இருந்து வெளியே வருவதால் அது ஆம்ஆத்மி கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications