தேர்தலில் வாக்களிக்க இனி கைரேகை - கருவிழி பயேமெட்ரிக் அடையாளம் கட்டாயம்? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: தேர்தலில் ஆள்மாறாட்டம் செய்து வாக்களிப்பதை தடுக்கும் வகையில் கைரேகை மற்றும் கருவிழி ஸ்கேன் அடிப்படையில் பயோமெட்ரிக் அடையாள முறையை அமல்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் பயோமெட்ரிக் முறையில் வாக்காளர்களை அடையாளம் காணும் முறையை அமல்படுத்தவது பற்றி ஆராய வேண்டும் என்று கூறி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் வழங்கியது.

சட்டசபை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களின்போது கள்ள ஓட்டு போடும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இந்நிலையில் தான் தேர்தலில் ஆள்மாறாட்டம் செய்து வாக்களிப்பதை தடுக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
மனுவில் இருப்பது என்ன?
அந்த மனுவில் சில முக்கிய விஷயங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. அதன்படி, ''தேர்தல் நியாயமாக நடக்க இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் வாக்காளர்களுக்கு லஞ்சமாக பணம், பரிசு பொருட்கள் கொடுப்பது, ஆள்மாறாட்டம், ஒருவரே கூடுதல் வாக்குகளை பதிவு செய்வது .உள்ளிட்டவை தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் தேர்தல் நடைமுறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துள்ளது.
தேர்தலில் வாக்களிக்கும்போதுஆள்மாறாட்டம் செய்வது, ஒருவரே பல ஓட்டுகளை பதிவு செய்வது உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க வேண்டும். இந்த முறைகேடுகளை தடுக்க கைரேகை மற்றும் கருவிழி ஸ்கேன் அடிப்படையிலான பயோமெட்ரிக் அடையாள முறையை அமல்படுத்த இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்'' என கூறியிருந்தார்.
தலைமை நீதிபதி அமர்வு
அரசியல் சாசனத்தின் 32வது பிரிவின் கீழ் தாக்கல் செய்த இந்த மனுவை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மல்யா பாக்ஜி அடங்கிய அமர்வில் விசாரணை நடந்தது.
அப்போது வழக்கு தொடர்ந்த நீதிபதி அஸ்வினி குமார் உபாத்யாய், ''மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பயோமெட்ரிக் முறையில் தேர்தலை நடத்தினால் முறைகேடுகளை தடுக்க முடியும். விரைவில் நடைபெற உள்ள மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும். இது ஆள்மாறாட்டம் மூலமாக வாக்களிப்பதை தடுக்க இந்த செயல்முறையை கொண்டு வரலாம்.
தனித்துவமானது என வாதம்
பயோமெட்ரிக் அடையாளங்கள் தனித்துவமானவை. அதனை பொய்யாக உருவாக்க முடியாது. இதனால் ஒரு குடிமகனுக்கு ஒரு ஓட்டு என்பது உறுதிய செய்யப்படும். அரசியலமைப்பின் 324வது பிரிவின் கீழ் தேர்தல் ஆணையம் தனது முழுமையான அதிகாரங்களைப் பயன்படுத்தி இத்தகைய நடவடிக்கைகளை அமல்படுத்த முடியும்'' என்றும் வாதம் வைத்தார்.
உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
இதனை கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த், ''இந்த நடைமுறைக்கு தேர்தல் விதிகளில் மாற்றங்கள் தேவைப்படும். அதோடு நிதிச்சுமையும் அதிகரிக்கும். இருப்பினும் தேர்தல் நேர்மையாக நடத்துவது அவசியம். இதனால் தேர்தலில் நேர்மையை உறுதி செய்ய அதற்கான வழிமுறைகளை கண்டறியலாம்.' என்றார்.
அதன்பிறகு உச்சநீதிமன்றம்,''முதற்கட்டமாக, சில மாநிலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தல்களுக்கு இதை பரிசீலிக்க முடியாது. இருப்பினும், அடுத்த நாடாளுமன்ற அல்லது மாநில சட்டசபை தேர்தல்களுக்கு இத்தகைய முறையை பின்பற்ற வேண்டுமா? என்பதை தேர்தல் ஆணையம் ஆராய வேண்டும்'' என்று கூறியது. அதோடு வழக்கு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கும், இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.












Click it and Unblock the Notifications