தத்தெடுப்பு உரிமை, பாகுபாடு கூடாது: ஓரின சேர்க்கை திருமண வழக்கு- தலைமை நீதிபதி தந்த தீர்ப்பு இது!
டெல்லி: ஓரின சேர்க்கையாளர்கள் திருமண விவகாரத்தில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம்; தன்பாலின (ஓரின) சேர்க்கையாளர்கள் திருமணங்களுக்கு எதிராக நடவடிக்கை, பாகுபாடு காட்டக் கூடாது என்பது உள்ளிட்ட பல முக்கியமான கருத்துகள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் இடம் பெற்றுள்ளன.
ஓரின சேர்க்கை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் ரவீந்திர பாட், நரசிம்மா, சஞ்சய் கிஷன் கவுல்,ஹீமா கோலி ஆகியோர் அடங்கிய அரசியல் சான பெஞ்ச் இன்று தீர்ப்பு வழங்கியது.

தலைமை நீதிபதி சந்திரசூட் வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
*நமது முன்னோர்கள் 200 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்காத பல விஷயங்கள் இன்று ஏற்கப்படும் நிலைமை உருவாகி உள்ளது. முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட குழந்தை திருமணம், சதி உடன் கட்டை ஏறுதல் ஆகியவை இன்று நிராகரிக்கப்பட்டும் இருக்கின்றன.
*தன்பாலின உறவு அல்லது ஓரின சேர்க்கை நகர்ப்புற வாழ்வியலுடன் இணைந்தது மட்டுமே என்கிற மத்திய அரசின் வாதம் ஏற்புடைய வாதம் அல்ல. நகர்ப்புறவாசிகள் அனைவருமே ஒரே மேட்டுக்குடி வர்க்கம் என்ற கருத்துக்கு வர முடியாது.
*திருமணம் ஒரு நிலையான மாறாத அமைப்பு என்பது ஏற்புடையது அல்ல. திருமண சட்டங்களில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய திருமண சீர்திருத்தங்கள் சட்டங்கள் மூலமே மேற்கொள்ள முடியும்.
*நாடாளுமன்றத்தில் திருமண சட்டங்களில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என நீதிமன்றம் கட்டாயப்படுத்த முடியாது. நீதிமன்றங்கள் சட்டங்களை இயற்ற முடியாது; நாடாளுமன்றம்தான் சட்டத்தை இயற்ற வேண்டும்; திருமண சட்ட சீர்திருத்தம் குறித்து நாடாளுமன்றமே முடிவு செய்ய வேண்டும்.
*சிறப்பு திருமணச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் அது நாட்டை விடுதலைக்கு முந்தைய காலத்துக்குதான் இழுத்து செல்லும். தன்பாலின உறவு குறித்த விழிப்புணர்வு சமூகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
*ஒரு சட்டம் செல்லுமா? செல்லாதா? என்பதை ஆராயக் கூடிய அதிகாரததை நீதிமன்றத்திடம் இருந்து பிரித்து விட முடியாது.
*திருமணம் சார்ந்த தன்பாலின விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்ற மத்திய அரசின் வாதம் நிராகரிக்கப்படுகிறது. திருமணம் சார்ந்த சட்டத்தின் சரத்துகளை ஆய்வுக்குட்படுத்தக் கூடியதுதான் நீதிமன்றம்.
*குடும்ப விவகாரங்களில் நீதிமன்றங்களின் தலையீட்டை நிராகரிக்க முடியாது. இது நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குட்பட்டது. அத்தகைய நீதிமன்ற தலையீடு இல்லாமல் போனால பலவீனமானவர்கள் பாதிக்கப்படுவர்கள். பொதுமக்களின் அடிப்படை உரிமையை நீதிமன்றமே பாதுகாக்கும்.

*திருநங்கை ஒருவரால் பாலின உறவில் இருக்க முடியும் என்கிற போது அவரது திருமணம், சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படலாம்.
*பாலின மாற்று சிகிச்சை, குடும்பத்துடன் சேர்ந்து வாழுதல் என்கிற நிபந்தனைகளை தன்பாலின உறவாளர்களுக்கு கட்டாயமாக்கக் கூடாது. தன்பாலின ஜோடிகளுக்கு குழந்தைகளைத் தத்தெடுக்கும் உரிமை உண்டு. இவர்கள் குழந்தைகளை தத்தெடுக்க கூடாது என சொல்வது பாகுபாடு காட்டுவதாகும். ஓரின சேர்க்கை ஜோடிகள் சமூகத்தில் அனைவரையும் போல சமமாக வாழ அடிப்படை உரிமை உள்ளது, யாருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க அவர்களுக்குதான் சுதந்திரம் இருக்கிறது.












Click it and Unblock the Notifications