மோடி ஆட்சியில் வாழ்க்கை தரம் உயரும் நம்பிக்கை இல்லை! சி-வோட்டர் கருத்து கணிப்பில் 37% மக்கள் கருத்து
டெல்லி: கடந்த 2014ம் ஆண்டு முதல் பிரதமராக நரேந்திர மோடி இருந்து வருகிறார். இந்நிலையில் மோடியின் ஆட்சியின் கீழ் வாழ்க்கை தரம் உயரும் என்கிற நம்பிக்கை இல்லை என்று மக்கள் கூறியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டுக்கு முன்னதாக சி-வோட்டர் எனும் தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனம், பட்ஜெட் குறித்து மக்களின் கருத்துகளை பெற்று வெளியிடும். அந்த வகையில் இந்த ஆண்டு கருத்துக்கணிப்பை பல்வேறு மாநிலங்களில் 5,269 நபர்களிடம் மேற்கொண்டு முடிவுகளை நேற்று வெளியிட்டிருந்தது. இதில் 37% மக்கள், அடுத்தடுத்த ஆண்டுகளில் வாழ்க்கை தரம் மிக மோசமடையும் என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர். 2013க்கு பிறகு இந்த அளவுக்கான மக்கள் அதிருப்தியான கருத்துக்களை தெரிவிப்பது இதுதான் முதல் முறையாகும்.

வேலைவாய்ப்புகள், வேலை இருந்தாலும் உயராத சம்பளம், மறுபுறம் வாழ்க்கை செலவுகள் அதிகரிப்பு ஆகியவை இந்த அதிருப்திக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. குறிப்பாக உணவு பணவீக்கம் மக்களின் மற்ற இதர செலவுகளை சுருக்கியுள்ளதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிய வருகிறது. இதனால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியா எதிர்பார்த்த வேகத்தில் பொருளாதாரத்தில் வளராது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
கருத்துக்கணிப்பில் பதிலளித்தவர்களில் மூன்றில் 2 பேர், பணவீக்கம் கட்டுக்குள் இல்லை என்று கூறியுள்ளனர். குறிப்பாக மோடி பிரதமராக வந்த பின்னர்தான் விலைவாசி உயர்ந்திருப்பதாகவும், இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், செலவுகள் அதிகரித்துள்ளதால் அதை நிர்வகிப்பது கஷ்டமானதாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
உலக பொருளாதாரத்தில் இந்தியா 5வது இடத்திற்கு உயர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த அளவுக்கு மக்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை. குறிப்பாக புதியதாக வேலை வாய்ப்பை உருவாக்கும் விஷயத்தில் மிகப்பெரிய அளவுக்கு பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது. வேலைவாய்ப்புகளுக்காக ஏறத்தாழ ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்த நிதி வேலை வாய்ப்புகளை எதிர்பார்த்த அளவுக்கு உருவாக்கியதா? என்று கேட்டால் அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை.
இந்தியாவை பொறுத்தவரை சுமார் 13.4 கோடி கோடி மக்கள் ஒரு நாளை வெறும் ரூ.170க்கும் குறைவாகவே வருமானத்தை ஈட்டுகிறார்கள். அதேபோல ரூ.170-850 வரை சம்பாதிக்கும் மக்களின் எண்ணிக்கை 116.2 கோடியாக இருக்கிறது. இரண்டையும் சேர்த்தால் மொத்த மக்கள் தொகையில் 93.7% பேர் வருகின்றனர். இந்த சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை அரசு எப்படி உயர்த்தும்? இதற்கான அறிவிப்புகள் ஏதும் பட்ஜெட்டில் இருக்கிறதா? என்பது நாளைக்குதான் தெரிய வரும்.
சி-வோட்டர் கருத்து கணிப்பு முடிவு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?












Click it and Unblock the Notifications