தெரு நாய்க்கடி பிரச்சனை! உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரான தமிழ்நாடு தலைமைச் செயலாளர்!
டெல்லி: தெரு நாய் கடி விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் சொல்லியும் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாமல் இருந்தன. இதனையடுத்து பத்திரம் தாக்கல் செய்யாத மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
உத்தரவையடுத்து, தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் இன்று உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருக்கிறார். முன்னதாக தலைமை செயலாளர்கள் காணொலி வாயிலாக ஆஜராக உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கின் பின்னணி:
நாடு முழுவதும் தெரு நாய்க்கடி சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. தெருக்கள் நாய்களுக்கு சொந்தமானவை கிடையாது. அனுமதி பெற்றே நாய்களை வளர்க்க வேண்டும். மற்ற நாய்களை பிடித்து அதற்கான பிரத்யேக இடம் உருவாக்கப்பட்டு அதில் அடைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் விலங்கு நல ஆர்வலர்கள் இதற்கு எதிராக கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். பேரணியும் போராட்டங்களும் கூட நடந்தன.
இதனையடுத்து இந்த வழக்கு நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் கடந்த ஆக.22ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாய்களை பிடித்து அடைக்க வேண்டியதில்லை. அதற்கு பதில் தடுப்பூசி போட்டுவிட்டு அவற்றை மீண்டும் தெருக்களிலேயே விட்டு விட வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதற்கான வழிமுறைகளையும் கொடுத்திருந்தனர். இந்த வழிமுறைகளை பின்பற்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கைகளை 8 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தனர்.
ஆனால் தெலங்கான, மேற்கு வங்கம் மற்றும் டெல்லி நகராட்சி ஆகியவற்றை தவிர மற்ற மாநிலங்கள் எதுவும் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. எனவே அறிக்கை தாக்கல் செய்யாத மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் நேரில் ஆஜராகி அதற்கான விளக்கத்தை கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த உத்தரவையடுத்து இன்று தமிழ்நாடு தலைமை செயலாளர் முருகானந்தம் உட்பட அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள் நேரில் ஆஜராகியுள்ளனர்.
முன்னதாக இது குறித்து நீதிபதிகள் கூறுகையில், "யாரும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை. தொடர்ச்சியான சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. வெளிநாடுகளில் நம்முடைய நாடு தாழ்வாகக் காட்டப்படுகிறது" என்று வருத்தம் தெரிவித்தனர். தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் பத்திரம் தாக்கல் செய்திருந்ததால், அம்மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு ஆஜராவதிலிருந்து விளக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், டெல்லி பிரமாண பத்திரத்திற்கு பதில் அறிக்கை மட்டுமே தாக்கல் செய்திருப்பதால், டெல்லியின் தலைமை செயலாளர் ஆஜராக வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.












Click it and Unblock the Notifications