ம்ஹூம்.. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை செயல்பட அனுமதிக்கவே முடியாது: தமிழ்நாடு அரசு திட்டவட்டம்
டெல்லி: தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை செயல்பட அனுமதிக்கவே முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரும் வேதாந்தா குழுமத்தின் மனுவை அபராதம் விதித்து தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலை தொடங்கப்பட்டது முதலே சுற்றுச் சூழல் தொடர்பான பிரச்சனைகளால் கடும் எதிர்ப்பு உருவானது. ஸ்டெர்லைட் ஆலையை சுற்றிய அனைத்து கிராமங்களின் நிலத்தடி நீரும் பாழாகிப் போனது. இதனால் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்ட்டன.

2108-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கிராம மக்கள் தன்னெழுச்சியான போராட்டங்களை மேற்கொண்டனர். இந்தப் போராட்டங்கள் பல மாதங்களாக தொடர்ந்தன. 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதியன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பிரம்மாண்ட போராட்டத்தை பொதுமக்கள் முன்னின்று நடத்தினர். இப்போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இது இந்தியாவையே உறைய வைத்தது.
இதனைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டு மே 28-ந் தேதி தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி அகர்வால் தலைமையில் ஒரு ஆணையத்தையும் பசுமை தீர்ப்பாயம் அமைத்தது. அந்த ஆணையம் ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமான அறிக்கையை கொடுத்தது. பின்னர் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் வழக்குகள் நடைபெற்றன.

ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை அனுமதிக்க கோரியும் ஒரு வழக்கை வேதாந்தா குழுமம் தாக்கல் செய்தது. இந்த வழக்கை உச்சநீதிமன்றம் நாளையும் நாளை மறுநாளும் விசாரித்து தீர்ப்பு வழங்க இருக்கிறது. இவ்வழக்கில் வேதாந்தா குழுமம் ஏற்கனவே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசும் ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமான வாதத்தை இன்று தாக்கல் செய்தது. அதில், தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலை செயல்படுவதை அனுமதிக்கவே முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. மேலும் உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசின் எழுத்துப்பூர்வ மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications