அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தி பதவியேற்றுக்கொண்ட தமிழக எம்பிக்கள்! உற்று கவனித்த பாஜக!
டெல்லி: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில், இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. இந்நிலையில் அவர்கள் இன்று எம்பிக்களாக பதவியேற்றுக்கொண்டனர். இதில் சில எம்பிக்கள் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கையில் ஏந்தியவாறு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருந்த நிலையில், ஹாட்ரிக் வெற்றி என்கிற எதிர்பார்ப்புடன் பாஜக தேர்தலை எதிர்கொண்டது. அதேபோல பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியும் தேர்தலை தீவிரமாக எதிர்கொண்டது. தேர்தல் முடிவில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும் என்டிஏ கூட்டணி கட்சிகள் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றியிருந்தன.

இதனையடுத்து மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக்கொண்டார். தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைத்திருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்திருக்கிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தை சேர்ந்த இந்தியா கூட்டணியின் எம்பிக்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
இதில் காங்கிரஸ் எம்பிக்கள் சசிகாந்த் செந்தில், கே.கோபிநாத், ஜோதிமணி, எம்.கே.விஷ்னுபிரசாத், சுதா, திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் எம்பி ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சுப்பராயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சு.வெங்கடேசன் ஆகியோர் இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கையில் ஏந்தியபடி எம்பிக்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
முன்னதாக 18வது லோக்சபாவின் முதல் நாளான நேற்று, இந்தியா கூட்டணி எம்பிக்களின் கையில் அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர். பாஜக ஆட்சி பொறுப்புக்கு வந்ததிலிருந்து இந்திய அரசியலமைப்பு குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவுக்கு எம்பிக்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பையில் அரசியலமைப்பு புத்தகத்தின் நகல் இருந்தது. ஆனால், இதன் முகப்புரையில் 'சோசலிசம்' மற்றும் 'மதச்சார்பற்ற' எனும் வார்த்தைகள் இடம்பெறவில்லை. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
அப்போது தொடங்கி தற்போது வரை அரசியலமைப்பு சட்டம் விவகாரத்தில் பாஜக மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அட்டாக் செய்து வருகின்றன. இந்த லோக்சபா தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மை வெற்றி பெற்றால் அரசியலமைப்பு சட்டம் மாற்றப்படும் என்று வலதுசாரிகள் கூறியிருந்தனர். ஆனால், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளவே கூட்டணியின் உதவி பாஜகவுக்கு தற்போது தேவையாக இருக்கிறது.
இந்த பின்னணியில்தான் தமிழகத்தின் இந்தியா கூட்டணி எம்பிக்கள் அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தியவாறு எம்பிக்களாக உறுதிமொழி ஏற்றிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications