மினி சுவிட்சர்லாந்தை பார்க்க போய்.. ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப்! காஷ்மீர் அட்டாக்கில் தப்பிய தமிழக பெண்
ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் தமிழக பெண் அதிர்ஷ்டவசமாக தப்பியிருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், நூலிழையில் உயிர் தப்பியதாக கூறியிருக்கிறார்.
உயிர் தப்பியது தொடர்பாக அவர் அளித்த பேட்டி சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

பேட்டியில் அப்பெண்மணி கூறியதாவது, "என்னுடைய பெயர் ஜெயஸ்ரீ, நாங்கள் சென்னையிலிருந்து வந்திருக்கிறோம். நாங்கள் கடந்த 19ம் தேதி ஸ்ரீநகருக்கு வந்திருந்தோம். பெஹல்காம் பகுதிக்கு நேற்று சென்றோம். அங்கிருந்து குதிரை சவாரி செய்தோம். மற்ற பகுதிகளை பார்த்துவிட்டு, பைசாரன் பள்ளத்தாக்குக்கு சென்றுக்கொண்டிருந்தோம். குதிரை சவாரியில் எங்களை அழைத்து சென்றவர், இன்னும் 5 நிமிடத்தில் உலகின் மிக அழகான இடத்திற்கு, மினி சுவிட்சர்லாந்து பகுதிக்கு சென்றுவிடுவோம் என்று சொன்னார்.
ஆனால் எங்களுக்கு எதிர் திசையிலிருந்து பலர் குதிரையில் வேகமாக திரும்பிக்கொண்டிருந்தார்கள். வந்தவர்கள் எங்களை திரும்ப போக சொல்லி கூச்சலிட்டார்கள். அப்போதுதான் அங்கு தீவிரவாதிகளின் தாக்குதல் நடந்துக்கொண்டிருந்தது. நாங்கள் மிகவும் பயந்துவிட்டோம். எங்களுக்கு துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. 5 முறை தோட்டாக்களால் சுடும் சத்தம் கேட்டது. இதனையடுத்து நாங்கள் அங்கிருந்து தெறித்து ஓடினோம். சவாரி அழைத்து சென்றவர் எங்களை மிக வேகமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினார். அந்த தருணத்தில் சாவின் நுனிக்கு சென்று மீண்டும் திரும்பியதாக உணர்ந்தோம்" என கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் மிகவும் பிரசித்தி பெற்ற இடங்களில் பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியும் ஒன்று. இங்கிருந்துதான் புகழ்பெற்ற துலியன் ஏரிக்கு போக வேண்டும். எனவே, சுற்றுலா பயணிகள் பெஹல்காம் பகுதிக்கு வந்து, அங்கிருந்து பைசாரன் பள்ளத்தாக்குக்கு வருவார்கள். இந்த பாதையில் பேருந்து, கார், ஜீப் போக்குவரத்து வசதிகள் கிடையாது. மொத்தம் 6 கி.மீ தூரத்தை நடந்து செல்லலாம். அல்லது குதிரையில்தான் போகவேண்டும்.
பள்ளத்தாக்கு பகுதி முழுவதும் புல்வெளியாக ரம்மியமாக இருக்கும். இங்குதான் தாக்குதல் நடந்திருக்கிறது. புல்வெளி பகுதி என்பதால் பயணிகளால் ஓடி ஒளிந்துக்கொள்ள முடியாமல் போயிருக்கிறது. இது தீவிரவாதிகளுக்கு மேலும் வசதியாய் போக, சரமாரியாக துப்பாக்கியால் சுட்டிருக்கின்றனர். இதில் 28 பேர் வரை உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 2 பேர் வெளிநாட்டு பயணிகள். ஒருவர் இந்திய உளவுத்துறையை சேர்ந்த அதிகாரியாவார்.
கடந்த 2019 புல்வாமா தாக்குதலில் 47 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தார்கள். அதை தொடர்ந்து இன்று நடந்த தாக்குதல்தான் மிகபெரியதாக இருக்கிறது. அதேபோல 1990க்கு பிறகு சுற்றுலா பயணிகள் மீது தற்போது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்திற்கு சர்வதேச அளவில் கண்டன குரல்கள் எழுந்திருக்கின்றன. அமெரிக்க அதிபர், ரஷ்ய அதிபர் என பலரும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.
சம்பவம் நடந்த நேரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வளைகுடா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். ஆனால், தாக்குதல் சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் அவர் உடனடியாக இந்தியா திரும்பியிருந்தார். இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications