யாருயா நீ..டெல்லி ஏர்போர்டை அதிர வைத்த தமிழர்! பிரிட்டனிலிருந்து கூரியரில் பாஸ்போர்ட் அனுப்பி டிராமா
டெல்லி: பிரிட்டனில் இருந்து டெல்லி விமான நிலையம் வந்த தமிழ் இளைஞர் அதிகாரிகளிடம் கையும் களவுமாக சிக்கி இருக்கிறார். அவர் செய்த குற்றம் என்ன? விரிவாக பார்ப்போம்.
திருவாரூரை சேர்ந்தவர் விஜய் மோகன்தாஸ். 25 வயது இளைஞரான இவர் பிரிட்டனின் பர்மிங்காமில் இருந்து விமானம் மூலம் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி டெல்லி விமான நிலையத்துக்கு வந்தடைந்து இருக்கிறார். அவரது ஆவணங்களை பரிசோதனை செய்த விமான நிலையத்தில் இருந்த குடியேற்ற அதிகாரிகள் ஆள்மாற்றம் நடந்து இருப்பதை உறுதிபடுத்தினர். விமானத்தில் இருந்து இறங்கி வந்த விஜய் வைத்திருந்த ஆவணங்களை பரிசோதித்த அதிகாரிகள் ஆள்மாறாட்டத்தை கண்டுபிடித்தனர்.

இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மாணவர் விசாவை வைத்துக்கொண்டு இந்தியாவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து பிரிட்டன் சென்று உள்ளது அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதேபோன்று கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பெங்களூருவில் இருந்து இவர் பிரிட்டனுக்கு பயணம் சென்று இருக்கிறார். அப்போதுதான் மாணவர் விசாவின் கீழே ஒரு கூடுதல் பயணம் பதிவு செய்யப்பட்டு இருப்பது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
உஷாரான அதிகாரிகள் அந்த நாளின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இவர் மார்ச் 2021 ஆம் ஆண்டு விமான நிலையத்தில் புறப்பட்டு சென்ற படங்களை கிடைத்தன. அதை ஆய்வு செய்த அதிகாரிகளுக்கு சில முரண்பாடுகள் தெரிந்தன. ஆம், ஜனவரி 19 ஆம் தேதி சிக்கிய விஜய் மோகன்தாஸின் உருவமும் தோற்றமும், மார்ச் 2021 சிசிடிவி கேமரா படங்களில் இருந்த உருவத்துடன் ஒத்துப்போகவில்லை. இரண்டும் வித்தியாசமாக இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக விஜய் மோகன்தாஸிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு இருக்கின்றனர். அப்போதுதான் தெரிந்தது 3 ஆண்டுகளுக்கு முன் விமானத்தில் புறப்பட்டவர் விஜய் இல்லை என்று. அப்படியென்றால் அவர் யார்? என்ற கேள்விக்கு விஜய் அளித்த பதில் அதிகாரிகளை திடுக்கிட வைத்தது. விஜய் பிரிட்டன் சென்ற பிறகு தன்னுடைய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி வேறொருவர் பிரிட்டனுக்கு செல்ல உதவி இருக்கிறார்.
பணம் மற்றும் இதர காரணங்களுக்கான இந்தியாவில் உள்ள அந்த நபருக்கு கூரியர் மூலமாக பாஸ்போர்ட்டை பிரிட்டனில் இருந்து அனுப்பி வைத்து இருக்கிறார் விஜய். அந்த நபரும் விஜய் போன்றே காட்டிக்கொண்டு அதே பாஸ்போர்ட்டை பயன்படுத்தி விமானம் மூலம் பிரிட்டன் சென்று இருக்கிறார். இது தொடர்பாக விஜய் மோகன்தாஸை கைது செய்த அதிகாரிகள் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
விமான நிலையங்களில் கடத்தல், போலி பாஸ்போர்ட், போலி விசா, போலி டிக்கெட் என பல்வேறு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பிடிபடுவது வழக்கம். ஆனால் இப்படி ஒரு குற்றம் இதற்கு முன் நடந்திருக்குமா என்று கேட்டால் சந்தேகமே.












Click it and Unblock the Notifications