தெலுங்கானா முதல்வருடன் மோதலா? நான் வேறு மாநிலத்திற்கு மாற்றப்படுகிறேனா?.. ஆளுநர் தமிழிசை பதில்
டெல்லி: தெலுங்கானா முதல்வருடன் ஏற்பட்ட பிரச்சினையால் அந்த மாநில ஆளுநர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறீர்களா? என்ற கேள்விக்கு புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பதிலளித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் கடந்த 2019ஆம் ஆண்டு தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் இருந்த அவர் அங்கு மக்கள் நல பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில் புதுவை துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடியால் புதுவையில் ஏற்கெனவே இருந்த நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு நாராயணசாமிக்கும் கிரண்பேடிக்கும் இடையே உள்ள பனிப்போர் வெளியே தெரிந்தது.

புதுவை
இதையடுத்து புதுவையில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் கிரண்பேடி அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டு கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழிசை சவுந்திரராஜனுக்கு புதுவை துணை நிலை ஆளுநர் பதவி கூடுதலாக வழங்கப்பட்டது. இதையடுத்து நடந்த சட்டசபை தேர்தலில் புதுவையில் என்.ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. புதுவையில் அனைத்தும் சுமுகமாக போய் கொண்டிருக்கும் நிலையில் ஆளுநர் தமிழிசைக்கும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.

கேசிஆர்
"அண்ணா என அழைக்கும் கேசிஆர் எனது தாயின் மரணத்திற்கு கூட துக்கம் விசாரிக்கவில்லை" என தமிழிசை மிகவும் மனம் வருந்தி பேட்டியளித்திருந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழிசை டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

தெலுங்கானா முதல்வருடன் மோதலா
அப்போது தெலுங்கானா முதல்வருடனான மோதல் போக்கை அவர்களிடம் தமிழிசை புகாராக கூறியிருக்கலாம் என தெரிகிறது. இந்த நிலையில் தெலுங்கானா மாநில ஆளுநர் பதவியிலிருந்து தமிழிசை மாற்றப்பட்டு வேறு மாநிலத்திற்கு அதாவது பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்படுவார் என்ற தகவல்கள் வெளியாகின.

மாற்றப்படலாம் என்பது உண்மையல்ல
இதுகுறித்து நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் தமிழிசை கூறுகையில் நான் தெலுங்கானாவிலிருந்து மாற்றப்படலாம் என்பது யூகங்கள். நான் இதுகுறித்து நிறைய பேசியாயிற்று. நான் எனது கடமையை ஆற்றியதால் சில பிரச்சினைகள் ஏற்பட்டது. தெலுங்கானா அரசு கொடுத்த எம்என்சிக்கு நான் ஒப்புதல் அளிக்கவில்லை.

தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி வேண்டாம்
இதற்காக என் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி எல்லாம் வர வேண்டாம் என நான் கருதுகிறேன். வேறு எந்த விதத்திலும் நான் மாநில அரசுக்கு எதிராக நடக்கவில்லை. அண்மையில் பத்ராசலத்தில் பழங்குடியின மக்களுடன் இரு நாட்கள் தங்கியிருந்தேன். மக்கள் நன்றாக பழகுகிறார்கள். மத்திய அரசை எதிர்க்கும் நிலைப்பாட்டை எடுத்த பிறகு ஆளுநரையும் எதிர்க்க வேண்டும் என்ற கொள்கை முரண்பாடு வந்திருக்கிறது. ஆளுநர்கள் தங்களது கடமையையும் அரசியலமைப்பு சட்டத்தையும் பின்பற்றும்போது இது போன்ற காழ்ப்புணர்ச்சிகள் வரக் கூடும்.

அழைப்பை அழைப்பாக பாருங்கள்
தமிழக அரசு ஆளுநரின் தேனீர் விருந்தை புறக்கணித்ததில் நான் தலையிட விரும்பவில்லை. ஆனால் புதுவையிலும் நான் அழைப்பு விடுத்த தேனீர் விருந்தை கட்சிகள் புறக்கணித்தன. தயவு செய்து அழைப்பை அழைப்பாக மட்டும் பாருங்கள். அரசியலாக பார்க்க வேண்டாம் என்றார் தமிழிசை.












Click it and Unblock the Notifications