ஓயாத சர்ச்சை.. கேசிஆருடன் முற்றிய பஞ்சாயத்து! டெல்லியில் முறையிட்ட தமிழிசை! பரபர தெலுங்கானா!
டெல்லி : தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தமிழிசை சவுந்தரராஜன் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் 2019ஆம் ஆண்டில் தெலுங்கானா மாநிலத்தின், ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக நியமித்து, அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.

தெலுங்கானாவில் மோதல்
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடந்த சில மாதங்களாகவே மத்தியில் ஆளும் பாஜகவுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடுமையாக எதிர்வினை ஆற்றி வருகிறார். இதன் காரணமாக மாநிலத்தில் ஆளுநராக உள்ள தமிழ் இசைக்கும் அவர் உரிய மரியாதை அளிப்பது இல்லை என பாஜக வினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளும் வகையிலேயே தெலுங்கானா அரசு நடவடிக்கைகளும் உள்ளது.

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
மோதலில் உச்சபட்சமாக பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் உரை இடம் பெறவில்லை. பொதுவாக பட்ஜெட் கூட்டத் தொடர் ஆளுநர் உரையோடு தொடங்கப்படும் என்பது தான் மரபு. இது தமிழிசை சௌந்தர்ராஜன் கடும் அதிருப்தியில் ஆழ்த்திய நிலையில் அதனை அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அதே நேரத்தில் நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் எனக் கூறிய தமிழிசை சௌந்தர்ராஜன் நேரடியாக டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து புகார் அளித்தார். அதன் பின்னரும் இந்த விவகாரத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை

தெலுங்கானா அரசு விளக்கம்
முதல் இரண்டு ஆண்டுகள் சுமுகமாக சென்றுகொண்டிருந்த ஆளுநர் முதல்வர் இடையேயான உறவு சுமுகமாகவே இருந்ததாகவும் பல சந்தர்ப்பங்களில் அவர் அரசுடன் உடன்பட வில்லை எனவும் தெலுங்கானா அரசு குற்றம் சாட்டியுள்ளது. ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்தரராஜன் பல நாட்களாக எந்த முடிவும் எடுக்காமல் கோப்புகளை கிடப்பில் போட்டுள்ளார் எனவும் தெலுங்கானா அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

உச்சமடைந்த மோதல்
இந்த நிலையில்தான் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பத்ராசலம் பகுதிக்குச் சென்று இருந்தார் ஆனால் அவரை வரவேற்க மாவட்ட ஆட்சியர் மாவட்ட கண்காணிப்பாளர் வரவில்லை. இது மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதலை வெளிச்சம் போட்டு காட்டியது.

வெளியாகும் முக்கிய அறிவிப்பு
இதனிடையே இன்று அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்று உள்ள ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். தெலுங்கானாவில் நடைபெற்றுவரும் நிகழ்வுகள் குறித்து விரிவாகப் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் சில நாட்களில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளிவரும் எனவும், அதனை எதிர்பார்த்தே தமிழிசை சௌந்தரராஜன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது












Click it and Unblock the Notifications