மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு தடை விதியுங்கள்.. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
Recommended Video
டெல்லி: காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் கர்நாடக அரசு, அணை கட்டுவதற்கான ஆய்வறிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது. அப்போது காவிரியின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என்றால், காவிரி நீரை பகிர்ந்து கொள்ளும், தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களில் ஒப்புதலை பெற வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது. அந்த தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
இதற்கான பூர்வாங்க ஆய்வறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடகா அளித்திருந்தது. இதற்கு, மத்திய நீர்வளத்துறை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த நிலையில்தான் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு, இன்று, வழக்கு தொடர்ந்துள்ளது. காவிரியின் குறுக்கே அணையை கட்டுவது என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கும் எதிரானது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. எனவே கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.