உரிமை இழந்தோம், உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா?.. தர்ணாவில் பாட்டு பாடிய தமிழக எம்பிக்கள்
டெல்லி: 12 ராஜ்யசபா எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்ய கோரி நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா நடத்தி வரும் தமிழக எம்பிக்கள் "தோல்வி நிலையென நினைத்தால்... " எனும் ஊமை விழிகள் படத்தின் பாடலை பாடினர்.
கடந்த ஜூலை மாதம் தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம், வேளாண் சட்டங்கள் குறித்தும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மேசைகள் மீது ஏறியும் அறிக்கைகளை கிழித்தெறிந்தும் கடுமையான அமளியில் ஈடுபட்டனர்.

நடவடிக்கை
எதிர்க்கட்சியினரின் இந்த நடவடிக்கையால் இரவெல்லாம் தான் தூங்கவில்லை என மாநிலங்களவை சபாநாயகர் வெங்கய்ய நாயுடு கண்ணீர் வடித்தார். இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 29ஆம் தேதி நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. அப்போது கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தின் மாண்பை சிதைக்கும் வகையில் செயல்பட்ட 12 எம்பிக்கள் இந்த குளிர்காலக் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள் என அறிவித்தார்.

நடவடிக்கை
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாயா வெர்மா, பூலோ தேவி நீதம், ரிபுன் போரா, ராஜாமணி படேல், சையத் நசிர் ஹுசேன், அகிலேஷ் பிரசாத் ஆகிய ஆறு எம்.பி-க்களையும், சிவசேனா கட்சியைச் சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, அனில் தேசாய், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டோலா சென், சாந்தா ஷேத்ரி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த இளமாறன் கரீம், பினோய் விஸ்வம் உள்ளிட்ட 12 மாநிலங்களவை எம்.பி-க்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர்
இந்த நிலையில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் சபாநாயகர் வெங்கய்ய நாயுடுவை சந்தித்து சஸ்பெண்ட் நடவடிக்கையை நீக்குமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவரோ சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என சொல்லிவிட்டார். இதற்கு மறுப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு 12 எம்பிக்களும் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பாட்டு பாடி போராட்டம்
இவர்களுக்கு எதிர்க்கட்சியினர் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தொடர்ந்து 3ஆவது நாளாக மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது. இன்றும் காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழக எம்பிக்கள் பாட்டு பாடி போராட்டம் நடத்தினர்.

ஊமை விழிகள் பாடல்
ஊமை விழிகள் படத்தில் வரும் தோல்வி நிலையென நினைத்தால்... என்ற பாடலை திமுக எம்பி இளங்கோவன், திருச்சி சிவா, கனிமொழி சோமு உள்ளிட்டோர் செல்போனில் பார்த்தபடி பாடினர். அந்த பாடல் வரிகள் பின்வருமாறு:
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?
உரிமை இழந்தோம் உடமையும்
இழந்தோம் உணர்வை இழக்கலமா?
உணர்வை கொடுத்து உயிராய்
வளர்த்த கனவை மறக்கலாமா












Click it and Unblock the Notifications