காவிரி நீர்: கர்நாடகா 'கண்ணாமூச்சி'- மீண்டும் காவிரி ஆணையம்-16,000 கன அடிநீர் கோருவோம்- துரைமுருகன்!
டெல்லி: காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் டெல்லியில் நாளை பிற்பகல் கூட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 16,000 கன அடிநீர் திறக்க வலியுறுத்தப்படும் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு ஒவ்வொரு மாதமும் திறக்க வேண்டிய நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் படியான காவிரி நீரை கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு திறந்துவிடாமல் போக்கு காட்டி வருகிறது. கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி நீரை திறப்பது போல திறந்துவிடுவதும் படிப்படியாக குறைப்பதுமாக கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுகிறது அம்மாநில அரசு.

24,000 கன அடி நீர் கேட்ட தமிழ்நாடு: காவிரியில் தமிழ்நாடு அரசு முதலில் 24,000 கன அடிநீரை முறையாக திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால் கர்நாடகாவின் "வறட்சி" ஒப்பாரியை நம்பிய காவிரி மேலாண்மை ஆணையம் வெறும் 3,000 கன அடி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்க சொன்னது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கிலும் கூட 3,000 கன அடி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
பாஜக பற்ற வைத்த நெருப்பு: தமிழ்நாட்டுக்கு காவிரியில் ஒரு சொட்டு நீரை கூட தரக் கூடாது என கர்நாடகா பாஜக போராட்டத்தைத் தொடங்கி வைத்தது. ஒரு மாதத்துக்கு முன்னர் பாஜக பற்ற வைத்த நெருப்பு அணையாமல் இன்னமும் கர்நாடகாவின் மண்டியா உள்ளிட்ட இடங்களில் காவிரை நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கன்னட விவசாயிகள், அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
கர்நாடகா அணைகள் நிலவரம்: தற்போதைய நிலவரப்படி கர்நாடகாவின் தமிழ்நாட்டுக்கு நீரை திறந்துவிடும் கிருஷ்ணராஜ சாகர் (கேஆர்எஸ்) அணையின் நீர் மட்டம் 100.64 அடி. கபினி அணையின் நீர் மட்டம் 57.2 அடி. கேஆர்எஸ் அணைக்கு நீர் வரத்து கிடைக்கும் குடகு மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணை நீர்மட்டம்: ஆனாலும் காவிரியில் சொற்பமான நீரை திறந்துவிட்டது கர்நாடகா. இந்த நீர் போதுமானது அல்ல என்பதால் தமிழ்நாட்டின் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா விவசாயத்துக்கான நீர் திறப்பும் குறைக்கப்பட்டது. மேட்டூர் அணையில் தற்போது வெறும் 33.1 அடி நீர்தான் இருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் அளவு கணிசமாக குறைந்து போனதால் காவிரி டெல்டாவில் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒழுங்காற்று குழு பரிந்துரை: இந்நிலையில் திடீரென சில நாட்களாக காவிரியில் நீர் திறப்பு அளவை அதிகரிப்பது; சட்டென குறைப்பது என போக்கு காட்டுகிறது கர்நாடகா. மேலும் டெல்லியில் காவிரி ஒழுங்காற்று கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 16,000 கன அடிநீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டமோ, வினாடிக்கு வழக்கம் போல 3,000 கன அடிநீரை தமிழ்நாட்டுக்கு திறக்க காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரைத்தது.

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்: இதனடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நாளை பிற்பகல் 2 மணிக்கு டெல்லியில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்று பரிந்துரை அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு மேலும் 3,000 கன அடிநீரைத் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடப்படும்.
16,000 கன அடி நீர் கேட்போம்: இதனிடையே டெல்லியில் நாளை நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு 16,000 கன அடிநீரை திறக்க வலியுறுத்துவோம் என தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது; தற்போது குடிநீருக்காக மட்டுமே மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. ஆகையால் காவிரியில் கர்நாடகா அரசு 16,000 கன அடி நீரை திறக்க உத்தரவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்துவோம் என கூறியுள்ளார் அமைச்சர் துரைமுருகன்.












Click it and Unblock the Notifications