இளம் டென்னிஸ் வீராங்கனை சுட்டுக்கொலை.. தந்தை கைது! ஹரியானாவில் கொடூர சம்பவம்.. என்ன நடந்தது?
குருகிராம்: ஹரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்த இளம் டென்னிஸ் வீராங்கனையான ராதிகா யாதவ் என்பவரை அவரது தந்தையே சுட்டுக்கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. திடுக்கிட வைக்கும் இந்த் சம்பவம் குறித்த விவரங்களை பார்க்கலாம்.
ஹரியானா மாநிலம் குருகிராமில் பெற்ற மகளை தந்தையே சுட்டுக்கொலை செய்துள்ளார். ராதிகா யாதவ் (வயது 25) என்ற அந்த இளம்பெண் டென்னிஸ் வீராங்கனை ஆவார். குருகிராமில் உள்ள சுசாந்த் லோக் பேஸ் -2 பகுதியில் வசித்து வந்த ராதிகா யாதவை, அவரது தந்தையான தீபக் யாதவ் சுட்டுக்கொலை செய்துள்ளார்.

ராதிகா மீது பாய்ந்த 2 குண்டுகள்
பெற்ற மகள் என்றும் பாராமல் கண்மூடித்தனமாக சுட்டு தள்ளியுள்ளார். இதில் மூன்று குண்டுகள் காரில் பட்டுள்ளது. மீதமுள்ள இரண்டு குண்டுகள் ராதிகா யாதவ் மீது பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் பலியாகியுள்ளார். சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் தீபக் யாதவை கைது செய்தனர்.
ஹரியானாவை உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "துப்பாக்கி குண்டு காயங்களுடன் பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனையில் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து, அவரது வீட்டிற்கு சென்ற போது, அவர் வீட்டில் டென்னிஸ் அகாடமி நடத்தி வந்ததும், அவரது தந்தையால் துப்பாக்கியால் சுடப்பட்டதும் தெரியவந்தது.
என்ன நடந்தது?
மகளை துப்பாக்கியால் சுட்டதை தீபக் யாதவ் ஒப்புக்கொண்டுள்ளார். ராதிகா யாதவ் டென்னிஸ் அகாடமி நடத்தி வந்தது, தீபக் யாதவிற்கு பிடிக்கவில்லை என்றும் இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்து இருக்கலாம் என்றும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
ராதிகா யாதவ் தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிகளில் விளையாடியுள்ளார். பல போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. ராதிகா யாதவை கொல்ல பயன்படுத்திய துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவரது தந்தையிடம் போலீசார் தொடர்ந்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications