பெகாசஸ் மென்பொருளை வாங்கியது மத்திய அரசா? உச்சநீதிமன்றம் அமைத்த குழு எதனை எல்லாம் விசாரிக்கும்?
டெல்லி: செல்போன்கள் ஒட்டு கேட்புக்கான பெகாசஸ் மென்பொருளை மத்திய அரசு வாங்கியதா? அல்லது மத்திய புலனாய்வு ஏஜென்சிகள் வாங்கியதா? என்பது உள்ளிட்டவை குறித்து உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழு விசாரிக்க உள்ளது.
Recommended Video
பெகாசஸ் மூலம் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டது தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் 9 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.
இவ்வழக்கில் விரிவான பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு மறுத்தது. இதற்கு ஏற்கனவே தலைமை நீதிபதி என்.வி.ரமணா கடும் அதிருப்தியை தெரிவித்திருந்தார்.

உச்சநீதிமன்ற குழு
இந்நிலையில் பெகாசஸ் மூலம் செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரவீந்தரன் தலைமையிலான இந்த குழுவில் ரா முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி, டாக்டர் நவீன் சவுத்ரி, டாக்டர் பிரபாகரன், டாக்டர் அஸ்வின் அனில் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு எவற்றை எல்லாம் விசாரணை நடத்தும் என்கிற வரையறைகளையும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

எதையெல்லாம் விசாரிக்கும்?
அதாவது, பெகாசஸ் மென்பொருள் மூலம் நாட்டு குடிமக்களின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டனவா? செல்போன்களில் உள்ள தகவல்கள் ஹேக் செய்து பார்க்கப்பட்டனவா? அப்படி இருந்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் யார்? யார்? இது தொடர்பான செய்திகள் வெளியான பின்னர் மத்திய அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுத்தது?

வாங்கியது யார்?
பெகாசஸ் மென்பொருளை வாங்கியது மத்திய அரசா? அல்லது மாநில அரசுகளில் ஒன்றா? அல்லது மத்திய புலனாய்வு ஏஜென்சிகளில் ஒன்றா? அப்படி செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டிருந்தால் எந்த சட்டத்தின் கீழ் ஒட்டு கேட்கப்பட்டது? அதற்கான சட்டப்பூர்வ வழிகாட்டுதல்கள் என்ன? ஒட்டுகேட்பு நடைமுறைகள்தான் என்ன?

உச்சநீதிமன்றத்துக்கு பரிந்துரைகள்
பெகாசஸ் மென்பொருளை தனிநபர்கள் யாரேனும் பயன்படுத்தி ஒட்டு கேட்டுள்ளனரா? அப்படி ஒட்டு கேட்பது சட்டப்பூர்வமானதா? ஆகியவை தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த குழு விரிவான விசாரணையை நடத்தும். மேலும் தனிநபர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்டப்பூர்வமான பரிந்துரைகளை வழங்க வேன்டும்; நாட்டின் சைபர் பாதுகாப்பை மேம்படுத்துகிற பரிந்துரைகள், இத்தகைய ஒட்டு கேட்பு கருவிகள் மூலம் நாட்டின் குடிமக்களின் தனிநபர் பாதுகாப்பு அல்லது உரிமைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான பரிந்துரைகள், ஒட்டு கேட்பு மூலம் பாதிக்கப்படும் குடிமக்கள் தங்களுக்கான நீதியை பெறுவதற்கான வழிமுறைகள் ஆகியவற்றையும் இந்த குழு பரிந்துரைக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

அரசுகளும் பெகாசஸ் மென்பொருளும்
பெகாசஸ் பிரச்சினை வந்தபோது எதிர்க்கட்சிகள் வைத்த வாதமும், ஊடகங்களில் வல்லுநர்கள் வைத்த வாதமும் இந்த செயலிக்காக செலவழிக்கப்படும் பணம் சாதாரண தனி நபரோ ஏஜன்சியோ செலவு செய்ய முடியாது. காரணம் பல லட்சம் கோடிகள் அதற்காக செலவாகும் என்பதால் ஒரு அரசாங்கம் தான் இதை செய்ய முடியும் என்பதால் இதில் அரசு சம்பந்தப்படுவதற்கு அதிக வாய்ப்பு என குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதே போன்று பெகாசஸ் நிறுவனமும் இதை தனியாருக்கு தர மாட்டோம் நாடுகளுக்கு மட்டுமே அளிப்போம் என்று விதியை வைத்திருந்தது. இந்த அம்சங்களையும் உச்ச நீதிமன்ற குழு விசாரிக்க வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications