காவிரி நதி நீர் பங்கீடு விவகாரம்! காவிரி மேலாண்மை ஆணையம் பதில்தர உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் பதில்தர உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவிரி நீரை பெறுவதற்கு தமிழ்நாடு தொடர்ந்து கர்நாடக மாநிலத்திடம் போராட வேண்டியதாக இருக்கிறது. இந்த முறையும் காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி கர்நாடகா தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்கவில்லை. எனவே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. தற்போது ஆகஸ்ட் மாதம் முடிய இருக்கிறது. இருப்பினும் இந்த மாதத்திற்கான 37.9 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா இன்னும் வழங்கவில்லை.

எனவே இந்த தண்ணீரை உடனே திறந்துவிடுமாறு உத்தரவிட வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது. அதில், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் அதனை கர்நாடகா செயல்படுத்தவில்லை என்பதையும் மேற்கோள் காட்டியிருந்தது. அதேபோல தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு எதிராக கர்நாடக அரசும் பதில் மனுத்தாக்கல் செய்திருக்கிறது. அதில்,
"நடப்பாண்டில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவாகவே பொழிந்துள்ளது. இதனால் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய பிரதான அணைகள் நிரம்பவில்லை. இருப்பினும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது" என்று விளக்கமளித்திருந்தது. இந்நிலையில் இந்த மனுவானது கடந்த 21ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி,
"உச்சநீதிமன்றம் சொல்லியும் கர்நாடக அரசு தண்ணீர் கொடுக்கவில்லை. அதேபோல காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படியும் கர்நாடக நடந்துக்கொள்ளவில்லை. எனவே இந்த மனுவை விசாரிக்க புதிய அமர்வை இன்றே அமைக்க வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார். இதனையடுத்து இந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, பி.கே.மிஸ்ரா அடங்கிய புதிய அமர்வை நியமித்தது. இந்நிலையில் இந்த அமர்வு வழக்கு விசாரணையை இன்று தொடங்கியது.

இதில் தீர்ப்பின்படி 40 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா திறந்துவிடவில்லை என தமிழ்நாடு அரசு தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால் மழைப்பொழிவு 42% குறைவு என்பதால், நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், எனவேதான் தண்ணீரை திறக்கவில்லை என்றும் கர்நாடகா தரப்பு பதில் வாதத்தை முன் வைத்தது. இரு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இரு மாநிலங்களும் இதில் தொடர்புடைய அதிகாரிகளிடமே ஏன் இவ்விவகாரத்தை எடுத்துச் செல்லக் கூடாது? என்று கேள்வியெழுப்பினர்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு, "தீர்ப்பின் படி கர்நாடகா தண்ணீர் திறக்கவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதை தவிர வேறு வழியில்லை" என்று கூறியிருந்தது. இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், காவிரி மேலாண்மை ஆணையம் பதில்தர உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதாவது, "காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தான் நிபுணர்கள் இருக்கிறார்கள் நாங்கள் நிபுணர்கள் அல்ல. எதையும் விசாரிக்காமல் உடனடியாக உத்தரவு பிறப்பிப்பது என்பது எங்களுக்கு சிரமம்" என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
காவேரியில் தண்ணீர் திறப்பு இரு மாநிலங்களின் கோரிக்கை மழைப்பொழிவு உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் திங்கட்கிழமை கூடி ஆலோசித்து முடிவெடுத்து அதன் விவரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து வழக்கு செப்டம்பர் மாதம் 1ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications