ரமலான் தினத்தில் நடைபெறவிருந்த சிபிஎஸ்இ தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றம்... சிபிஎஸ்இ அறிவிப்பு!
டெல்லி: மார்க்சிஸ்ட் எம்.பி, சு.வெங்கடேசன் கோரிக்கையை ஏற்று ரமலான் தினத்தில் நடைபெற இருந்த 10,12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு மாற்றப்பட்டுள்ளது.
மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உத்தரவின்பேரில் சிபிஎஸ்இ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
சிபிஎஸ்இ 10,12 ஆம் வகுப்பு தேர்வுகள் மே13, 15 நடக்க இருந்தது. அப்போது ரமலான் பண்டிகை வருவதால் இந்த தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் எம்.பி, சு.வெங்கடேசன் கடந்த பிப்.8-ம் தேதி மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், சிபிஎஸ்இ இயக்குநர் ஆகியோருக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் ரமலான் இஸ்லாமியர்களின் முக்கிய திருநாள். இவ்வாண்டு மத்திய, மாநில அரசுகள் மே 14-ம் தேதி ரமலான் விடுமுறையை அறிவித்துள்ளன.
ஆனால் பிறை தென்படுவதைப் பொறுத்து ரமலான் தேதி ஒரு நாள் முன்னதாகவோ, பின்னதாகவோ மாற வாய்ப்புள்ளது. இதைக் கணக்கில் கொள்ளாமல் சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புத் தேர்வுகளை மே 13, 15 தேதிகளில் அறிவித்துள்ளது. ரமலான் தேதி மாறும் பட்சத்தில் இஸ்லாமிய மாணவர்கள் சிரமத்துக்குள்ளாவார்கள். எனவே தேர்வு தேதிகளை மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு பதிலளித்த மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், தேர்வுத் தேதிகளை மாற்றுவதற்கான கோரிக்கை பரிசீலனை செய்யப்படும். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பதில் அளித்தார். இந்த நிலையில் கல்வித்துறை அமைச்சர் கூறியபடியே ரமலான் தினத்தன்று நடைபெற இருந்த சிபிஎஸ்இ தேர்வு தேதியில் மாற்றம் செய்து சிபிஎஸ்இ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.